search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பலி"

    • விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 19-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 62). விவசாயி. இவருக்கு சொந்தமான நெல் வயல் வெட்டுக்காடு பகுதியில் உள்ளது. இதில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூரில் உள்ள ஒரு உரக்கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி பாண்டியன் தனது வயலுக்கு தெளித்தார். அப்போது திடீரென வயலில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குமுளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கூடலூர் முனுசாமி கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் (42) என்ற விவசாயி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நெல் வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த போது மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 28-ந்தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தடுத்து 2 விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த சம்பவத்தில் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் உரக்கடைகளில் ஆய்வு செய்து மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து வேளாண்மை அலுவலர் தெரிவிக்கையில், உரக்கடையில் மாதம் தோறும் முறையாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2 விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூரில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளை ஆய்வு செய்து மருந்துகளை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

    மேலும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்த கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்த விவசாயி வயல்களுக்கு தாசில்தார் சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மல்லிகார்ஜுன் ரெட்டி விவசாய நிலத்தில் இறங்கி பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
    • சகோதரர்கள் இருவரும் மருந்து அடிப்பதை வரப்பில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம், சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி ( வயது50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர்.

    விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அதே பகுதியை சேர்ந்த மல்லிகாஜுன் ரெட்டி (20) என்பவரை நேற்று அழைத்து வந்தனர்.

    மல்லிகார்ஜுன் ரெட்டி விவசாய நிலத்தில் இறங்கி பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருவரும் மருந்து அடிப்பதை வரப்பில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின் ஒயர் ஒன்று அறுந்து வயலில் விழுந்துள்ளது.

    இதனை கவனிக்காத மல்லிகார்ஜுன் ரெட்டி மின் ஒயரை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிருக்கு போராடினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட சகோதரர்கள் இருவரும் வயலுக்குள் ஓடி மல்லிகார்ஜுன் ரெட்டியை காப்பாற்ற முயன்றனர்.

    அப்போது அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது வெளியில் தெரியவில்லை.

    இந்த நிலையில் பெத்த ஓபுல ரெட்டியின் மனைவி சாவித்திரியம்மா விவசாய நிலத்தில் உள்ளவர்களுக்கு மதியம் சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே போல அதே மாவட்டம், சிம்மாத் திரிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூமி சந்திரசேகர ரெட்டி. நேற்று மதியம் இவரது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த 2 வழக்குகள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே மாவட்டத்தை சேர்ந்த 4 விவசாயிகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×