search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி
    X

    வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி விவசாயிகள் 3 பேர் பலி

    • மல்லிகார்ஜுன் ரெட்டி விவசாய நிலத்தில் இறங்கி பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார்.
    • சகோதரர்கள் இருவரும் மருந்து அடிப்பதை வரப்பில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம், சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி ( வயது50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இருவரும் சேர்ந்து விவசாயம் செய்து வந்தனர்.

    விவசாய நிலத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அதே பகுதியை சேர்ந்த மல்லிகாஜுன் ரெட்டி (20) என்பவரை நேற்று அழைத்து வந்தனர்.

    மல்லிகார்ஜுன் ரெட்டி விவசாய நிலத்தில் இறங்கி பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார். சகோதரர்கள் இருவரும் மருந்து அடிப்பதை வரப்பில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின் ஒயர் ஒன்று அறுந்து வயலில் விழுந்துள்ளது.

    இதனை கவனிக்காத மல்லிகார்ஜுன் ரெட்டி மின் ஒயரை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிருக்கு போராடினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட சகோதரர்கள் இருவரும் வயலுக்குள் ஓடி மல்லிகார்ஜுன் ரெட்டியை காப்பாற்ற முயன்றனர்.

    அப்போது அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    சம்பவம் நடந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது வெளியில் தெரியவில்லை.

    இந்த நிலையில் பெத்த ஓபுல ரெட்டியின் மனைவி சாவித்திரியம்மா விவசாய நிலத்தில் உள்ளவர்களுக்கு மதியம் சாப்பாடு கொண்டு சென்றார். அப்போது 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதே போல அதே மாவட்டம், சிம்மாத் திரிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூமி சந்திரசேகர ரெட்டி. நேற்று மதியம் இவரது விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த 2 வழக்குகள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே மாவட்டத்தை சேர்ந்த 4 விவசாயிகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×