search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன பதிவு"

    • வாகன பதிவு எண் எழுதுவதில் விதிமீறல்; மதுரையில் 1,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • ஒரே நாளில் ரூ.35ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிக மான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அவற்றுக்கான வாகன பதிவெண் பலகையில் எழுத்துக்கள் இப்படித்தான் இடம்பெற வேண்டும் என்று மோட்டார் வாகனச்சட்டம் வரையறுத்துள்ளது.

    அதன்படி 70 சிசி-க்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களின் முன்புறம், 3.0 மிமீ உயரம்- 5 மி.மீ தடிமன்- 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் மற்றும் எண்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    அதேபோல வாகனங்க ளின் பின்புறம் 35 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகளும், 40 மி.மீ உயரம், 7 மி.மீ தடிமன், 5 மி.மீ இடைவெளியுடன் கூடிய எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் 65 மி.மீ உயரம், 10 மி.மீ தடிமன், 10 மி.மீ இடைவெளியுடன் கூடிய எழுத்துகள் அமைய வேண்டும்.

    சொந்த வாகனமாக இருந்தால் வெள்ளை பலகையில் கறுப்பு நிறத்திலும், வணிக வாகனமாக இருந்தால் மஞ்சள் பலகையில் கறுப்பு நிறத்திலும் எழுத்துகள் இருக்க வேண்டும். அவை தெளிவாக இருப்பது கட்டாயம். ஆனால் மதுரை மாவட்டத்தில் வலம் வரும் பெரும்பாலான வாகனங்களின் பதிவு எண் பலகையில், எண் கணிதப்படி ராசியான எண்ணை பெரிதாகவும் மற்றவற்றை சிறியதாகவும் எழுதுகின்றனர்.

    தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்ள, தூய தமிழில் பதிவெண் எழுதுகின்றனர்.

    அடுத்தபடியாக கட்சி சின்னம், கத்தி, வீச்சரிவாள், துப்பாக்கி, சினிமா நடிகர்கள் மற்றும் சுவாமி ஆகிய படங்கள் ஒட்டப்படுகிறது. அரசு அதிகாரிகள் பணியாற்றும் துறையை எழுதுகின்றனர். பதிவெண்ணில் முதல் 3 இலக்கம் 0 ஆக இருந்தால், அதைச்சேர்த்து எழுதாமல் 4-வதாக உள்ள எண்ணை மட்டும் பெரிதாக எழுது கின்றனர். 8055 என்ற எண்ணை BOSS என்று எழுதுகின்றனர்.

    மோட்டார் வாகனச் சட்டத்தில் வழங்கப்பட்ட வரன்முறைகளைத் தாண்டி பதிவெண் பலகையில் இடம்பெறும் கூடுதலான எழுத்து கூட விதிமீறல் தான். அதன்படி முதல் முறை என்றால் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.

    அபராதம் என்பதற்கும் மேலாக விபத்து நேரும் பட்சத்தில் பதிவெண் தெளிவாக இருந்தால் மட்டுமே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, பாதிப்பை ஏற்படுத்திய நபர் பற்றிய விபரம் தெரியவரும். ஆனால் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை கண்டு கொள்வது இல்லை. பதிவெண் போர்டை விளம்பரம்- அறிவிப்பு பலகையாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல.

    எனவே வாகன பதிவுஎண் பலகையில் விதிகளை மீறி பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி மதுரை மாநகரில் போக்குவரத்து உதவி கமிஷனர் மாரியப்பன், செல்வின் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசாரின் வாகன பதிவு எண் பலகை அதிரடி சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

    அதன்படி இதுவரை 1699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் தல்லாகுளம் சரகம் ஆகிய பகுதிகளில் நேற்று போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் 735 வாகனங்கள் சிக்கின. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் மட்டும் ஒரே நாளில், ரூ. 35 ஆயிரம் அபராதத்தொகை வசூலாகி உள்ளது.

    அடுத்தபடியாக தகுதிச்சான்று பெற வருவோர் வாகனங்களில் இதுபோன்ற விதிமீறல் இருந்தால் சான்று வழங்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

    • 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது
    • தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    சென்னை:

    பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யும் முறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    நாடு முழுவதும் வாகனங்களால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2020ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. 2020 மார்ச் 31ம் தேதி வரை பிஎஸ்-4 வகை வாகனங்களை பதிவு செய்யலாம். அதன்பின்னர், ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 என்ற அதிக மாசு ஏற்படுத்தாத புதிய வகை வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

    இதனால், பிஎஸ்-4 வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்த நிறுவனங்கள், அந்த வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன. அதன் பிறகு நூதன முறையில் முறைகேடாக குறைந்த விலையில் விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து துறையின் அனுமதி பெறாமல் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக 8 என்ற கூட்டுத்தொகை வரும் எண்ணை யாரும் விரும்பி பதிவு செய்வதில்லை. அந்த கூட்டுத்தொகை வரும் வாகன எண்களை வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் பேக்லாக் என்று தனியாக வைத்துவிடுவார்கள். அந்த எண்களை யாரும் கேட்காததால் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி, அந்த எண்களில் பிஎஸ்-4 வாகனங்களை முறைகேடாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மென்பொருள் நிறுவன முன்னாள் ஊழியர்கள் ஒரு சேர்ந்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, கோவை, நாமக்கல் பகுதிகளில் அதிக அளவு பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்களை பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தணிக்கை செய்யும்போது 8 கூட்டுத்தொகை கொண்ட பதிவெண்களில் வாகனங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும், அதுபற்றி விசாரித்தபோதுதான், இந்த முறைகேடு தெரியவந்திருக்கிறது.

    இதையடுத்து தமிழக அரசு, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பிஎஸ்-4 வகை வாகனங்கள் 8 கூட்டுத்தொகை வரும் எண்ணில் பதிவு செய்தவர்கள் யார்? விற்பனையாளர், வாங்கியவர், பதிவு தேதி உள்ளிட்ட விவரங்களை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் முழு விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், வாகன பதிவில் எத்தனை கோடி மோசடி நடந்துள்ளது? என்பது தெரியவரும்.

    தடை செய்யப்பட்ட பிஸ்-4 வாகனங்களை பதிவு செய்த இந்த முறைகேடு, தமிழகம் மட்டுமமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

    ×