search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை விபத்து"

    • திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பள்ளி சத்துணவு கூட கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது.
    • புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் இருந்து வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை சத்துணவு கூடத்தில் ஊழியர் சாந்தி மாணவர்களுக்கு சமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து சாந்தி தலையில் விழுந்தது. அப்போது சாந்தி கதறி துடித்தார்.

    இந்த சத்தம் கேட்ட ஆசிரியர்கள் சத்துணவு கூட்டத்திற்கு சென்று பார்த்தபோது சாந்தி துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் அந்த நேரத்தில் யாரும் உள்ளே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த சத்துணவு கூடத்தை உடனடியாக இடித்து புதிய சத்துணவு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

    ×