search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை"

    மூதாட்டியை கொன்று நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரை அடுத்த காவூர் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது90). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    சுப்பிரமணியன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சீதாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சீதாலட்சுமி வெகுநேர மாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டில் இருந்த கட்டிலில் சீதாலட்சுமி இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர். சீதாலட்சுமி உடல்நல குறைவு காரணமாக இறந்ததாக கருதி அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

    அப்போது சீதாலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதையும், அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருப்பதையும் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கடையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சீதாலட்சுமி அணிந்திருந்த 30 கிராம் தங்க நகைகள் இல்லாததால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    நேற்று இரவு வரை அப்பகுதியினர் சீதாலட்சுமியை பார்த்துள்ளனர். இதனால் கொலையாளிகள் நள்ளிரவு நேரத்தில் அவரது வீடு புகுந்து கொலையில் ஈடுபட்டிருக்கின்றனர். சீதாலட்சுமி கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை கொன்றது யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த கொலை சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×