search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் தாமதம்"

    அரக்கோணத்தில் நேற்று இரவு மின்சார ரெயில் தாமதத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×