search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியம் நவாஸ்"

    • பைசாகி திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 2,400 சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.
    • ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது என்றார் மரியம் நவாஸ்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 2,400 சீக்கியர்கள் யாத்திரையாக சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சாகிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சாப் மாகாண முதல் மந்திரி மரியம் நவாஸ் பங்கேற்றார். அப்போது சீக்கிய யாத்திரிகர்கள் குழுவைச் சந்தித்தார். அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்த யாத்திரிகர்கள்.

    அப்போது பேசிய மரியம் நவாஸ், ஒரு நாடு தனது அண்டை நாடுகளுடன் சண்டையிடக் கூடாது. அவர்களுக்காக இதயத்தைத் திறக்கவேண்டும் என தெரிவித்தார். இதுதொடர்பாக, தனது தந்தை நவாஸ் ஷெரிப் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

    • பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்றார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சீன என்ஜினீயர்கள், பணியாளர்கள் பல்வேறு திட்டப்பணிகளில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சீனர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதலில் சீன என்ஜினீயர்கள் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து சீனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சீனா பாகிஸ்தானை கேட்டுக்கொண்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வசிக்கும் சீனாவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என பஞ்சாப் மாகாண முதல்மந்திரியும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மரியம் நவாஸ் கூறுகையில், பாகிஸ்தானில் இருக்கும் சீனர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்கும்போது அவர்கள் கோபப்படுகிறார்கள். அவர்கள் எந்த ஒழுக்கத்தின் கீழும் வர விரும்பவில்லை. பயங்கரவாதம் கடினமான போரின் வடிவத்தை எடுத்துள்ளது. பயங்கரவாதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய தளங்களில் நாம் அவர்களை விட முன்னால் இருக்கவேண்டும். பயங்கரவாதிகளிடம் நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் கிடைத்த அமெரிக்க ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளன. இது பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.

    • மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
    • பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார்கள்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.

    மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் மரியம் நவாஸ்.

    50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள தனது சித்தப்பா ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றார். இதைத் தொடர்ந்து உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

    பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

    • பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் பதவியேற்றார்.
    • இதனால் பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமை பெற்றார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் சுயேட்சைகள் மரியம் நவாஸ் ஷெரீபுக்கு ஆதரவு தந்தனர்.

    பஞ்சாப் மாகாண சட்டசபையானது முதலில் கூட்டத்தொடரை தொடங்க உள்ளது. பஞ்சாப் சட்டசபையை வெள்ளிக்கிழமை கூட்டும்படி கவர்னர் பலிகுர் ரகுமான் அழைப்பு விடுத்திருந்தார்.

    மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக மரியம் நவாஸ் இன்று பதவியேற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல் மந்திரி என்ற பெருமையை பெற்றார்.

    • லண்டன் அவென்பீல்ட் குடியிருப்பில் ஆடம்பரமான 4 வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
    • விசாரணை அதிகாரியின் கருத்தை ஆதாரமாக கருத முடியாது என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாசுக்கு, அவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது கணவர் சப்தாருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்மூலம் மரியம் நவாஸ் (வயது 48) தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். இதையடுத்து சிறைத்தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனின் அவென்பீல்ட் குடியிருப்பில் ஆடம்பரமான 4 வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணை அதிகாரியின் கருத்தை ஆதாரமாக கருத முடியாது என்று தெரிவித்தது. கூட்டு விசாரணைக் குழு எந்த உண்மைகளையும் முன்வைக்கவில்லை, அது தகவல்களை மட்டுமே சேகரித்து கொடுத்துள்ளது என்று நீதிபதி கயானி குறிப்பிட்டார்.

    வழக்கின் முடிவில், அரசுத் தரப்பு ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறி மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துள்ளது. இதனால் மரியம் நவாஸ் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.

    • இம்ரான் கான் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார்.
    • பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டு சதி என்ற பெயரில் பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்று ஆளுங்கட்சியான பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு ஜூலை 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, லாகூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மரியம் நவாஸ், இம்ரான் கான் மீது குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை புறக்கணித்தார்.

    இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது கும்பல் ஆட்சி, பஞ்சாப் மாகாணத்தின் வளங்களை கொள்ளையடித்தது. இம்ரான் கான் கட்சியான பிடிஐ ஆட்சிக் காலத்தில், பஞ்சாப் அனாதை போல் இருந்தது. ஆனால் இப்போது சிங்கம் பிரதமராக மீண்டும் வந்துவிட்டது, ஆகவே பஞ்சாப் முன்பு போல் முன்னேறும். பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன. துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தானிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர், குழப்பவாதி மற்றும் ஏமாற்றுக்காரர் ஒருவர் பிரதமரானார்.

    நாட்டு மக்களை அமெரிக்கா அடிமைகளாக வைத்திருக்கிறது என்று அவர் மக்களிடம் அடிக்கடி பொய் கூறுவார். இப்படி அவர் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார். வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×