search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கைது"

    • சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சேலம் போக்சோ நீதிமன்றம் செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.

    இதனால் சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 6-ந்தேதி சிறுமி சென்றார். சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, டாக்டர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதே சமயம் குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுநாள் (7-ந்தேதி) அதிகாலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனிடையே சிறுமிக்கு பிறந்த சிசுவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், டி.எஸ்.பி. ஹரிசங்கரி உள்ளிட்டோர் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து, திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட செல்வாம்பாள், இரு தினங்களுக்கு முன் வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் போக்சோ நீதிமன்றம், செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டது. இதனால் போலீசார், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் செல்வாம்பாளை நேற்றிரவு கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதுபோல் சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.
    • நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபர். இவரை கடந்த 20-ந் தேதி மர்ம கும்பல் காரில் கடத்தியது. இதைதொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் சில மணி நேரத்திலேயே சரவணன் மீட்கப்பட்டார்.

    விசாரணையில் தொழில் அதிபர் சரவணன் ரூ.1 கோடி பணத்தகராறில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ், கோவை சிறைக்காவலர் நாகேந்திரன், கரூர் அரவிந்த்குரு, திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ், மதுரையை சேர்ந்த அஜய், விஜயபாண்டி என்பது தெரிந்தது.

    அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து பொம்மை துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரிந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடத்தலுக்கு காரணம் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வரும் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பது தெரிய வந்தது.

    சரவணன், ஆரோக்ய ராஜ் ஆகிய இருவரிடமும் டாக்டர் அமிர்தாவுக்கு பழக்கம் இருந்து உள்ளது.

    அவர்களுக்கு இடையே பணப்பிரச்சினை இருப்பதை அறிந்து சரவணன் கடத்தலுக்கு டாக்டர் அமிர்தா திட்டம் வகுத்து கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

    இதையடுத்து டாக்டர் அமிர்தாவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி முன்பு டாக்டர் அமிர்தாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே நள்ளிரவு சிறையில் இருந்த டாக்டர் அமிர்தாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நள்ளிரவு 1 மணி அளவில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    அமிர்தாவின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர்.
    • ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை தியாகராயநகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் சரவணன் (வயது 46). கடந்த 20-ந் தேதி இவரை வீடு புகுந்து ஒரு கும்பல் காரில் கடத்தியது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சில மணி நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார்.

    மேலும் தொழில் அதிபரை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவை சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் அரவிந்த்குரு (23), திருப்பூர் கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை அஜய் (24), விஜயபாண்டி (25) என 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறி இருந்தது. கடத்தல் கும்பலிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விசாரணையில் சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்த ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் மிரட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டு கொடுத்தது தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் அமிர்தா என்பதும், அவர் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த வழக்கில் போலீசார் தேடுவதையறிந்து அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணையில் டாக்டர் அமிர்தாவும், தொழில் அதிபர் சரவணனும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுபான கூடத்தில் அறிமுகமாகி உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஆரோக்கியராஜும் இவர்களுடன் பழக்கத்தில் இருந்துள்ளார்.

    இதற்கிடையே டாக்டர் அமிர்தாவுக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை ஏற்பட்டு பகை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியராஜும் சரவணனிடம் பணத்தை இழந்திருப்பது டாக்டர் அமிர்தாவுக்கு தெரியவந்துள்ளது.

    இதையடுத்து சரவணனை கடத்தி பணத்தை பெற அவர்கள் திட்டம் போட்டுள்ளனர். அப்போது டாக்டர் அமிர்தா, 'நான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்னால் சரவணன் உடனே வந்துவிடுவார். பின்னர் அவரை இங்குள்ள அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பணத்தை வாங்கி விடலாம்' என்று கூறியிருக்கிறார்.

    அதன்படி சம்பவத்தன்று ஆரோக்கியராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சரவணன் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே, பொம்மை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

    விசாரணைக்கு பின்னர் டாக்டர் அமிர்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×