search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் பயணிகள்"

    • சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது
    • குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வண்டலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் மகேந்திரா சிட்டி தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை சாலையோரத்தில் எந்த பஸ் நிறுத்த நிழற்குடையும் இல்லை.

    இதனால் பயணிகள் சாலையோரத்தில் வெட்ட வெளியில் பஸ்களுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சாலையில் காத்திருக்கிறார்கள்.

    மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், மறைமலைநகர், பொத்தேரியை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. தினந்தோறும் மாணவ, மாணவிகள் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பஸ்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல் ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழித் தடங்களிலும் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வரை சாலையோரத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை இல்லை.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது, சாலை விரிவாக்கம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பஸ்பயணிகளுக்கு நிழற்குடை, பஸ்நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. சாலையோரத்தில் எது பஸ் நிறுத்தம் என்று தெரியாமல் பயணிகள் கூட்டமாக நிற்கும் போது சிறிது தூரம் தாண்டி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் பயணிகள் முண்டியடித்து ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. மதியம் வெயிலில் வெட்டவெளியில் நிற்கமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விரைவில் இந்த பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    ×