search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுச்சேலை"

    • வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.
    • பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.

    காஞ்சிபுரம் புடவையின் வலிமையும் மகத்துவமும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகளை வாங்க தமிழகம் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

    தரமான அசல் பட்டுச் சேலைகளை வாங்க வேண்டும் என விரும்பி வரும் வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல் வெளியூரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருகிறார்கள்.

    மற்ற மாவட்டங்களில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுவதாகவும் இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன. இதனால்,போலிகளை கண்டறிவதில், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமம் ஏற்படுகிறது என்றும் பட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டு விற்பனை கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணி நூல்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளில் அசல் ஜரிகையைக் கொண்டு நெசவாளர்கள் தரமாக நெய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், இதைத் தடுக்கும் வகையில் சில தனியார் பட்டு விற்பனைக் கடைகளில் ஒரிஜினல் போன்று வடிவமைப்பைக் காட்டி தரத்தைக் குறைத்து பட்டுகள் விற்பனை செய்து விடுகின்றனர்.

    மேலும் காஞ்சிபுரத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் வாகன பதிவு எண்ணை குறி வைத்து இடைத்தரகர்கள் சிலர் வாகனங்களில் பின் தொடர்ந்து டிரைவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களை தங்களுக்கு கமிஷன் கொடுக்கும் கடைகளுக்கு திசை திருப்பி விடுகின்றனர்.

    அங்கும் அசல் காஞ்சிபுரம் சேலைகள் விற்கப்படுவதில்லை என்பதால் போலியான பட்டுகளை வாங்கி பொதுமக்கள் ஏமாந்து செல்லும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களாக இந்த இடைத்தரகர்களின் அட்டகாசங்கள் அதிரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரத்துக்கு நம்பி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை காணப்படுகிறது.

    இடைத்தரகர்களால் காஞ்சிபுரம் பட்டின் தரமும் மதிப்பும் சிதைத்து வருகிறது.

    இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அண்ணா, முருகன், காமாட்சியம்மன் உள்ளிட்ட பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரத்தில் பாரம்பரியம் மாறாமல் பல ஆண்டுகளாக பட்டுச் சேலை நெய்து தந்து வருகிறோம். தற்போது அறிஞர் அண்ணா, முருகன், காமாட்சியம்மன், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் அசல் ஜரிகையைக் கொண்டு, தரமான பட்டுச் சேலைகளுக்கு வடிவமைப்பு தந்து, அவற்றை சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப கொடுக்கிறோம்.

    மேலும் தரத்துக்கேற்ப அரசால் விலை நிர்ணையிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இடைத்தரகர்களால் நீண்ட தொலைவில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பட்டு சேலை வாங்க வரும் மக்கள் அசல் காஞ்சிபட்டு என நம்பி போலி பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பட்டு சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும். இதேபோல் இடைத்தரகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் பட்டு சேலை என கூறி, வெளியூர் சேலைகளை விற்கின்றனர். அவை பட்டு சேலையே கிடையாது. வெளியூரில் இருந்து வாங்கி வந்த, சாதாரண சேலைகளை ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, மோசடியாக விற்கின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய கைத்தறி துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

    கைத்தறி கூட்டுறவு சங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை திசை திருப்பி, புரோக்கர்கள் பலர் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர். அவற்றை தட்டிக் கேட்கும் சங்க ஊழியர்களை, புரோக்கர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டுகிறார்கள். சில சமயங்களில் தாக்குகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை இடைத்தரகர்களை ஒடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.
    • குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர் குமரவேலு. இவரது மனைவி கலையரசி.

    இவர்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை பட்டு சேலையில் வடிவமைத்து கைத்தறியில் நெசவு செய்து வழங்கி வருகின்றனர்.

    இவர்களிடம் சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3-வது ஆண்டாக திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வித்தியாசமாக பட்டுச் சேலை தயாரித்து வழங்க கேட்டுக்கொண்டார்.

    வாடிக்கையாளர் வேண்டுகோளின்படி பட்டுச்சேலையில் பெருமாளின் திருமுகங்களையும், முந்தானையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் மற்றும் லட்சுமி தேவியை வடிவமைக்க முடிவெடுத்தனர்.

    அதன்படி குமரவேலு- கலையரசி தம்பதியினர் பெருமாளின் திருமுகம், ரெங்கநாதர் லட்சுமி தேவியுடன் இருப்பதை 8 நாட்களில் இரவு பகலாக வேலை பார்த்து அழகிய பட்டுச் சேலையை தயாரித்து உள்ளனர்.

    தங்க ஜரிகை இழைகளால் நெசவு செய்யப்பட்ட இந்த பட்டுச்சேலை 21½ முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் உள்ளது. அதில் மொத்தம் 427 பெருமாளின் திருமுகங்களும், பார்டரில் 27 ஜோடி யானைகளும் உள்ளன. முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரெங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாளுக்கு வாடிக்கையாளரால் வழங்கப்படும் இந்த பட்டுச் சேலையை விரதம் இருந்து நெசவு செய்ததாக நெசவு தொழிலாளி குமரவேலு-கலையரசி தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.

    ×