search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா மாறுதல்"

    • பட்டா மாறுதல்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்ற பிறகு கையெழுத்திடுகின்றனர்.
    • உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் அழகப்பன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா அமராவதி புதூர் கிராமத்தில் எனது விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டு வருவாய் ஆவணங்களின் அடிப்ப டையில் ஆக்கிரமிப்புகளை உரிய காலத்திற்குள் அகற்ற உத்தரவிட்டிருந்தனர்.

    நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட கலெக்டர், அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    நீதிபதிகள் கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பாக ஏன்? எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்.

    பல்வேறு வழக்குகளிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கின்றன. இதனால் கடந்த 100 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால் சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் கால அவகாசம் வழங்க தயாராக உள்ளது. ஆனால் அவ்வாறாக ஏன்? எந்தவித மனுவும் தாக்கல் செய்வதில்லை.

    இத்தகைய செயல்கள் ஆக்கிரமிப்பாளர்களை அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாகவே அமைகிறது. மேலும் ஒவ்வொரு தாசில்தார் அலுவலகங்க ளில் பட்டா மாறுதல் செய்வதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டே அதிகாரிகள் பட்டா மாறுதல் செய்கின்றனர். இதற்காக தனி புரோக்கர்கள் செயல்படுகின்றனர் என நீதிபதிகள் வேதனை தெரி வித்தனர்.

    லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் நீதிமன்ற உத்தரவை சட்டத்தின் அடிப்படையில் எப்படி பின்பற்ற வேண்டும் என அனைத்து தாசில்தாருக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.

    அதன் பின்பும் முறையாக நடவடிக்கை எடுக்காத தாசில்தார் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் தரப்பில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி மாவட்ட கலெக்டர் மீதான அவ மதிப்பு வழக்கினை முடித்து வைத்தார். மனுதாரரிடம் மேலும் கோரிக்கை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


    • பட்டா மாறுதல் விண்ணப்பிக்க இனி தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்.
    • இருந்த இடத்திலே இருந்து விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பட்டா மாறுதல் செய்ய பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. மேலும் மாறுதல் பெறுவதற்கு பலமுறை அலைய வேண்டிய சூழல் இருந்தது.இதையடுத்து பொதுமக்களின் தேவைக்காக, இ - சேவை மையங்கள் வாயிலாக 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தது.

    இந்த முறையில் விண்ணப்பித்தால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் சரிபார்த்து தாசில்தார் கையெழுத்திட வேண்டும். இதை ஆன்லைன் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.தற்போது இதை எளிமையாக்கும் வகையில் இருக்கும் இடத்தில் இருந்தே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாலுகா அலுவலகம் மற்றும் சப் - கலெக்டர் அலுவலகங்களில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பட்டா மாறுதல் விண்ணப்பிக்க இனி தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். எங்கு இருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

    பட்டா மாறுதலின் நடவடிக்கையின் போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள், பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா புலப்படம், அ - பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும், எந்நேரத்திலும் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் வாயிலாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், எங்கிருந்தும், எந்நேரத்திலும் என்ற திட்டத்தின்படி பட்டா மாறுதலுக்கு இருந்த இடத்திலே இருந்து விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வீண் அலைச்சலை பொதுமக்கள் தவிர்க்கலாம். இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றனர்.

    • பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை.

    மதுரை:

    அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    குறிப்பாக சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி துறை மூலம் வழங்கப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

    அதேபோல் வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சாதி, வாரிசுதாரர், இருப்பிடம், வருமானம் உள்பட பல்வேறு சான்றிதழ்களை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தவிர https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பம் செய்யலாம்.

    இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி பொதுமக்கள் எளிதாக பட்டா மாறுதலுக்கு வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.

    பட்டா மாறுதலை பொறுத்தவரை உட்பிரிவற்ற பட்டா மாறுதல், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என இருவகை உள்ளது. ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை, முழுவதுமாக ஒருவருக்கு விற்பனை செய்தால், அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அதுவே அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

    தற்போது ஒருவர் பத்திரம் பதியும் போது உட்பிரிவு இல்லாத நிலங்கள் அனைத்திற்கும், பத்திரப்பதிவு துறையில் இருந்து வருவாய் துறைக்கு குறிப்பு அனுப்பப்பட்டு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. உட்பிரிவு இனங்களுக்கு பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட உட்பிரிவு இல்லாத இனங்களுக்கும் இ-சேவை மையம் மூலமே விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுகிறது. சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது.

    இந்த நிலையில் தான் தமிழக அரசு, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த இணையதளத்திற்கு சென்றவுடன்முதலில் உங்களது பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்பதற்கான சான்றாக கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்வார்கள்.

    ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படும். சரியான காரணங் கள் இல்லாமல், உங்களது மனு திருப்பி அனுப்படமாட்டாது. எனவே லஞ்சம் கொடுப்பதும் தடுக்கப்படுகிறது.

    பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    1. கிரையப் பத்திரம்.

    2. செட்டில்மெண்ட் பத்திரம்

    3. பாகப்பிரிவினை பத்திரம்

    4. தானப்பத்திரம்

    5. பரிவர்த்தணை பத்திரம்

    6. விடுதலை பத்திரம்

    இதர ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

    குடியிருப்பு ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது,

    மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட்,

    வாக்காளர் அடையாள அட்டை.

    ×