search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர் பாதிப்பு"

    • ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது.
    • அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கபட்டது.

    இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை 90 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய 4 தாலுகாவில் பல பகுதிகளில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. விவசாயிகளும் அறுவடை ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தன. மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. நள்ளிரவு முழுவதும் இடைவிடாமல் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 65.6 மி.மீ. மழை பதிவானது.

    இந்த கனமழையால் மங்கைநல்லூர், மணல்மேடு, திருஇந்தளூர், நல்லத்துக்குடி, மணக்குடி, சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயராக இருந்த வயல்களில் தண்ணீர் புகுந்தன. தொடர் மழையால் வயல் முழுவதும் வெள்ளக்காடாகி அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பயிர்கள் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-

    ஏக்கருக்கு ரூ.30 அயிரம் வரை செலவு செய்து பயிரிட்டோம். பலர் கடன் வாங்கி தான் சாகுபடி செய்திருந்தனர். திடீர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் திடீர் மழை எங்களை புரட்டி போட்டுள்ளது. வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய ஒரிரு நாட்கள் ஆகும்.

    அப்படியே வடிந்தாலும் பயிர்கள் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும். தற்போது வரை 10 ஆயிரம் ஏக்கர் வரை பயிர் பாதிப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாதிப்பு இதைவிட அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் பாதிப்பு பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பயிருக்காக நாங்கள் வாங்கிய கடனை ஒரளாவது அடைக்க முடியும் என்றனர்.

    • நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள பெரிய முல்லைவாயல், புதுப்பாக்கம், கும்மனூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களை சேர்ந்தவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இவர்கள், அருமந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கிலோ ரூ.85 -க்கு ஏ.ஜி.ஆர். என்ற விதை நெல்லை வாங்கி நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடையில் விற்கப்பட்டது தரமற்ற மலட்டு விதை நெல் என்பது தெரிந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சோழவரத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற விதை நெல்லை சந்தையில் புழக்கத்தில் விட்டவர்கள் மற்றும் இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.

    மேலும் முறையாக ஆய்வு செய்யாமல் மலட்டு விதை நெல்லை சந்தைப்படுத்திய தனியார் நிறுவனத்திற்கு தரச்சான்று வழங்கிய சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    ×