search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடையில் கொள்ளை"

    நெல்லை டவுன் மேல ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே நகைக்கடையை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெல்லை:

    நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33). இவர் நெல்லை டவுன் மேல ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது தந்தை லட்சுமணன். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ஆகும்.

    நேற்று இரவு மணிகண்டனும், நகைக்கடை ஊழியர்களும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் அதிக சத்தம் கேட்காதபடி முன்பக்க கிரீல் பூட்டையும், கதவையும் உடைத்தனர். உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் சோக்கேஸ் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த தங்க செயின், நெக்லஸ், வளையல்கள் உள்பட 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை மூட்டை கட்டி கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று காலை கடை உரிமையாளர் மணிகண்டன் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது முன்பக்க பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சின்ன சின்ன மோதிரங்கள், கம்மல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் நெல்லை குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த நகைக்கடையை படத்தில் காணலாம்.

    கொள்ளையர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சோகேசை உடைத்த போது ஒரு கொள்ளையனின் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கிடந்த கண்ணாடி துண்டுகளில் ரத்தம் சிதறி இருந்தது. அதை போலீசார் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது நகைக்கடையையும், அதன் அருகே உள்ள மெயின் ரோட்டையும் சுற்றி வந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் சேகரித்த தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த நகைக்கடை டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. மேலும் அந்த பகுதியில் மெயின் ரோட்டிலும் நகைக்கடையிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கொள்ளை சம்பவத்தில் பல கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×