search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர்கள் போராட்டம்"

    • போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று உள்ளதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்துள்ளன.
    • மாநகராட்சியில் தினமும் 70 டன் வரை குப்பைகள் சேரும். இன்று துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவுக் காவலர்கள், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர்கள், வரி வசூலர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்கள் என 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து இன்று 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை 90 சதவீதம் குறைத்தும், வெளிக்கொணர்வு முகமை மூலம் (அவுட்சோர் சிங்) ஒப்பந்த பணியாளராக ஆக்கும் நகராட்சி நிர்வாக துறையின் அரசாணைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.

    தூய்மை பணியாளர் துப்புரவு மேற்பார்வையாளர், ஓட்டுநர், கணினி இயக்குனர், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு 1.4.2021 முதல் உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் நிலுவை ஊதியத்தை கணக்கிட்டு அனைத்து தின ஊதிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவு பணியாளர்கள் பங்கேற்று உள்ளதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் பல்வேறு இடங்களில் குவிந்துள்ளன. மாநகராட்சியில் தினமும் 70 டன் வரை குப்பைகள் சேரும். இன்று துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

    மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்களின் முற்றுகை போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×