search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் மாவட்டம்"

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாக அமைச்சர் காமராஜ் கூறினார். #GajaCyclone
    சுந்தரக்கோட்டை:

    கஜா புயல் திருவாரூர் மாவட்ட பகுதியை கடும் சேதத்துக்கு உள்ளாக்கி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டார். அப்போது தாலுகா அலுவலக சாலை, மேலராஜவீதி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாய்ந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து ராஜாம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்.

    அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளது. புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் 190 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 40 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடின்றி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் 3 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பேரிடர் மேலாண்மை துறையினர், தீயணைப்பு படை வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என அனைத்து துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மீட்பு பணிகள் தொய்வின்றி துரிதமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடவில்லை.
    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது.

    நேற்று 2-வது நாளாக திருவாரூர் பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப் பட்டது. ரெயில்கள் இயங்கிய போதும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. லாரிகள், வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவர் படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். திருவாரூர் கமலாலயம் கிழக்கு கரையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில் கட்சியினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் வர்த்தகர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். பின்னர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கருணாநிதியின் மறைவையொட்டி திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். பூக் கடைகள், பிளக்ஸ் போன்ற கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    திருவாரூர் பஸ் நிலையம், கடைவீதி போன்ற முக்்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பதால், அவருடைய பிரிவை தாங்க முடியாமல் திருவாரூர் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    நன்னிலம், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், பனங்குடி, சன்னா நல்லூர், பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. அதேபோல கருணாநிதியின் மறைவையொட்டி கோட்டூர், பெருகவாழ்ந்தான், களப்பாள், விக்கிரபாண்டியம், திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கருணாநிதியின் மறைவையொட்டி மன்னார்குடியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
    ×