search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூரில் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார்"

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.1.34 கோடி அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. #SivanthiAditanar
    சென்னை:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறையின் செயலாளர் இரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்- அமைச்சர், “திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பதற்காக உரிய இடத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான வரைபடத்துடன் கூடிய 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டை மாவட்ட கலெக் டரின் மேலொப்பத்துடன் அனுப்புமாறும், முதல்- அமைச்சரின் ஒப்புதல் பெற ஏதுவாக, 5 மாதிரி வரைபடங்களையும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளரிடம் (கட்டிடங்கள்) கேட்கப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணம் 0.93.0 ஏர்ஸ் நிலத்தில், 60 செண்ட் நிலத்தை தேர்வு செய்து அந்த இடத்துக் கான புலத்தணிக்கை அறிக்கையை 24.3.2018 அன்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பிவைத்தார்.

    பொதுப்பணித்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) வீரபாண்டியன்பட்டணம் கிராமத்தில் மொத்த பரப்பு 342.22 சதுர மீட்டரில் (78.41 சதுரமீட்டரில் மணிமண்டபம், 263.81 சதுர மீட்டரில் நூலகம், ஆண்கள் மற்றும் மகளிர் கழிப்பறை) மணிமண்டபம் அமைக்க ஏதுவாக ரூ.1.50 கோடிக்கான தோராய திட்ட மதிப்பீட்டை (சிலை அமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு) அரசுக்கு அனுப்பி வைத்து, அந்த தோராய திட்ட மதிப்பீட்டுக்கு நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்கும்படி கோரியுள்ளார்.



    அரசின் கவனமான பரிசீலனைக்கு பிறகு, முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டரின் அறிக்கை மற்றும் முதன்மை தலைமைப் பொறியாளரின் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட இடத்தில் 342.22 சதுர மீட்டரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.

    மணிமண்டபம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடுகளில் அரசின் முன் அனுமதியின்றி எந்த வித மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனருக்கு முழுமையான பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பி வைக்கும்படியும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) அறிவுறுத்தப்படுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதும், அதற்கான இடம் தேடும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  #SivanthiAditanar
    ×