search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகராஜர் கோவில்"

    திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந்தேதி ஆழிதேரோட்டம் நடக்கிறது.
    கடவுள்களின் மகாராஜா எனக் கூறப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 96 அடி உயரமுடைய ஆழித் தேரோட்டம் நடைபெறும்.

    இத்திருக்கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய கொடியேற்றம் நடைபெற்றது.

    வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் ஆரூரா தியாகேசா என மனம் உருகி வணங்கிய நிலையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், சைவமத சான்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திருவாரூர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரிகள் தொடங்கி யுள்ளனர் தேரோட்டத்தைமுன்னிட்டு முன்னதாக சுப்பிரமணியர், விநாயகர் தேரோட்டமும் இறுதியாக அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் ஆகிய 5 தேர்கள் கோயில் வீதிகளில் இழுத்துச் செல்லப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செய்திருந்தார். வருகிற ஏப்ரல் 1-ந்தேதி பிரசித்தி பெற்ற ஆழிதேரோட்டம் நடைபெறுகிறது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட விழா வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.

    ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.

    மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடத்திட கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆகும். சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரில் மூங்கில் மற்றும் அலங்கார துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் தேரோட்டத்துக்கு தேர் தயார் நிலையில் இருந்தது. தேரோட்டத்துக்கு முன் திருவாரூர் தேரடி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6.40 மணிக்கு மங்கள இசை முழங்க தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் காமராஜ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்று பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரின் பின்புறம் 2 புல்டோசர் எந்திரங்கள் தேர் சக்கரங்களை தள்ளிவிட சக்கரங்கள் மெதுவாக சுழன்று நிலையை விட்டு ஆடி அசைந்து புறப்பட்டது. தேரை வடம் பிடித்து இழுக்கும்போது பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேருக்கு முன்னால் பக்தர்கள் மேளதாளத்துடன் வாத்தியங்கள் முழங்கியபடி சென்றனர். தேருக்கு பின்புறம் தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரம் சார்பில் நடமாடும் மருத்துவமனை ஆகியவை வந்தன.

    தேரோட்டத்தை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்து இருந்தனர். இதனால் காணும் திசை எல்லாம் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆழித்தேரை பக்தர்கள் சாலைகளில் மட்டுமின்றி கட்டிடங்கள், மாடிகளிலும் ஏறி நின்று ரசித்தனர். ஆழித்தேர் கீழவீதியில் தொடங்கி தெற்குவீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்தது.
    ×