search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு மின்சார வாரியம்"

    • மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது.
    • கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 24-ந் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை (டான்ஜெட்கோ) மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனி நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என 3 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, 4 ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்படும் உடன்குடி அனல்மின் நிலையம் ஆகியவை தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு மாற்றப்படுகிறது. அதேபோல், 2 ஆயிரத்து 321 மெகாவாட் திறன் கொண்ட குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 41 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துக்கு மாற்றப்படுகிறது.

    கடந்த நிதியாண்டு நிதி அறிக்கைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் இந்த நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். ஊழியர்கள் இரு நிறுவனங்களுக்கு அயபணில் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

    • டிசம்பர் மாதம் பெரும்பாலான பகுதியில் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை.
    • கடந்த முறை செலுத்திய தொகையை இநத் முறையும் கட்ட அறிவுறுத்தல்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக சகஜ நிலை ஏற்பட்டது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிவ காலதாமதம் ஏற்பட்டது.

    இதனால் பெரும்பாலான வீடுகளில் டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோர்கள் அக்டோபர் மாதம் கணக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்பட்ட அதே தொகையை செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    • உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.
    • குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுபாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின் கணக்கீட்டின் போது முறையான கணக்கீட்டிற்கு பதிலாக தன்னிச்சையான, உண்மை நிலைக்கு மாறான கணக்கீட்டை கணினியில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க மற்றும் உரிய காலத்தில் உண்மையான கணக்கெடுப்பு உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து பல்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு கணக்கீட்டின் சரியான தன்மையை உறுதி செய்ய, சோதனை மின்அளவீட்டின் மூலமாக உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து, கள ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆய்வு செய்யப்படும் பிரிவில் களஆய்வு நாளின் கணக்கீட்டாளரால் கடைசியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் இணைப்புகளில் குறைந்த பட்சம் 10 சதவீத மின் இணைப்புகளை தேர்ந்தெடுத்து சோதனை மின் அளவீடு எடுப்பதன் மூலம், மின்கணக்கீட்டின் துல்லியத்தினை உறுதி செய்யும்படி அனைத்து சோதனை அலுவலர்களை அறிவுறுத்த வேண்டும்.

    உண்மையான மற்றும் துல்லியமான கணக்கீட்டை உறுதி செய்வதன் மூலம், நுகர்வோர்களின் தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம்.

    மேற்படி குறைபாடுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத நிலையினை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

    பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 103 பணியாளர்களின் வாரிசுதாரர்களில், தொழில்நுட்ப உதவியாளராக 24 நபர்களுக்கும், இளநிலை உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாளராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவியாளராக 56 நபர்களுக்கும், உதவி வரைவாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    • தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது

    சென்னை:

    மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

    இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

    இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது.

    மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் வீட்டு உபயோக நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.1000-க்கு மேல் இருந்தால் அவர்கள் அதை ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றில் மட்டும்தான் செலுத்த முடியும்.

    அதன்படி இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குவதால், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக பணம் பெறுவதற்கும், கவுண்டர்களில் தேவையற்ற பணத்தை கையாளுவதை தவிர்க்கவும் உதவும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது" என்றார்.

    இது தொடர்பாக கோவை நுகர்வோர் செய லாளர் கதிர்மதியோன் கூறும் போது, "கவுண்டர்களில் ரொக்கமாக பில் செலுத்துவதற்கான வரம்பை குறைக்கக் கூடாது. ஆன்லைனில் பணம் செலுத் தக்கூடிய நுகர்வோர் டிஜிட்டலை பயன்படுத்துகின்றனர். ஆன்லைனை பயன்படுத்து முடியாத மக்கள் கவுண்டர்களுக்கு வருகின்றனர் என்றார்.

    தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறும் போது, "ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்து வோரை ஆன்லைனில் செலுத்துமாறு கூற கவுண்டர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வாய்வழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர் ஊழியர்களையும், கவுண்டர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரே வளாகத்தில் பல பிரிவு அலுவலகங்கள் அமைந்திருந்தாலும் ஒரு கட்டிடத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டது" என்றார்.

    • தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு.
    • சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    சென்னை.

    தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று கடுமையான மழையும், காற்றும் இருந்தது. நள்ளிரவு வரை எங்கும் மின்தடை இல்லை.

    நள்ளிரவுக்குப் பிறகு காற்று அதிகமானதால் எந்தவித உயிர்ச்சேதமோ, பாதிப்போ ஏற்படா வண்ணம் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33கி.வோ., 11 33கி.வோ.,.22 கி.வோ., 110 கி.வோ.,230 கி.வோ., மற்றும் 400 கி.வோ., உட்பட மொத்தம் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, நேற்று இரவு முழுவதும் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

    இன்று அதிகாலை தொடங்கி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் களஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்புகள் உள்ளதோ அவற்றை எல்லாம் உடனுக்குடன் சரி செய்து இன்று மதியத்திற்கு முன்னதாகவே சீரான மின் விநியோகம் வழங்கப்படக் கூடிய வகையில் களத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    எனவே, இன்று மதியத்திற்கு முன்னதாகவே அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும். சென்னையைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மீதம் இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது என்பதை களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
    • வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின்கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின்சார நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின்சார கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    வீட்டு மின்நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின்சார நுகர்வோர்கள் பயன் அடைவார்கள். தற்பொழுது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

    தற்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின்சார நுகர்வு 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும்போது, அதற்கான மின்சார கட்டணத் தொகையானது 58.10 சதவீதம் அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின்சார நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் தற்போதைய புதிய மின்சார கட்டணத்தில் முற்றிலுமாக களையப்பட்டுள்ளது.

    கிராமப்புற பகுதிகளில் இயங்கி வரும் நூலகங்களுக்கான மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு ரூ.5.75 ஆகவும், நிலைக் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.60 ஆகவும் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின்சார கட்டணத்தை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு செய்து 30 சதவீதமாக குறைப்பதற்கு இந்த ஆணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    93 சதவீதம் (2.26 லட்சம்) சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு, குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது. 53 சதவீதம் (19.28 லட்சம்) வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.50 மட்டுமே உயர்ந்துள்ளது. விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல், யூனிட் ஒன்றிற்கு 70 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது. வாரியத்தின் பரிந்துரையை ஆணையம் ஏற்றுக்கொண்டதால், கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், உயர் அழுத்த மின்சார நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மானியம் ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.
    • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்.

    * 100 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் தொடரும்.

    * குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி முதலியவற்றின் மின்சார மானியம் தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
    • கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

    இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின் கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.

    அதன்படி ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் தங்களது கருத்துக்களை மின் கட்டண உயர்வு தொடர்பாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் நேரடியாகவும் கருத்து கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    முதலில் கோவையில் பொதுமக்களை சந்தித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதன்பிறகு மதுரையில் கடந்த 18-ந் தேதி பொதுமக்களை சந்தித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு பெற்றனர்.

    சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.

    காலை 10 மணி முதல் பொதுமக்கள் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அவை அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் கொடுக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணி வரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

    உணவு இடைவேளைக்கு பிறகு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மீண்டும் கூட்டம் நடக்கிறது. மாலை 5.30 மணி வரை இந்த கூட்டத்தை நடத்த ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கோவை, மதுரை, சென்னையில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் ஆய்வு செய்யப்படும். பயனுள்ள கருத்துக்களை அமல்படுத்த முடியுமா என்பது பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பிறகு மின் கட்டண மாற்றம் பற்றி தீர்மானிக்கப்படும்.

    தமிழக மின் வாரியம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடன்களை தவிர்த்து விட்டு பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தமான சூழ்நிலையில் தமிழக மின் வாரியம் இருக்கிறது.

    எனவே மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையில் மின் கட்டண உயர்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பரிந்துரைத்துள்ள கட்டண உயர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

    அனேகமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) மின்சார கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டதில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

    • தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது.
    • இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது.

    சென்னை:

    தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    மின் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் கட்டண உயர்வை எப்போது நடைமுறைப்படுத்து என ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

    இந்தியாவிலேயே, நகர மயமாக்கல் மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகவும் இருப்பதால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசு தற்போது பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஆனாலும் இப்போதுள்ள கடன் சுமை காரணமாக நிதி நெருக்கடி மேலும், மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது.

    இதனால் இந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 213 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மின் வாரியம், 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

    அதே நேரத்தில் கடந்த 8 வருடங்களாக செலவினங்களை ஈடுகட்டுவதற்கு மின் கட்டணம் மூலம் சமாளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

    ஆனாலும் புதிய மின் திட்டங்கள் நடைமுறை மூலதனம் போன்ற செலவுகளை சமாளிக்க தேசிய மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறது.

    மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும் இதுவரை மின் கட்டணத்தை உயர்த்த கோரும் மனுவை ஆணையத்தில் சமர்ப்பிக்காமல் உள்ளது.

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன.

    மின் வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்கவும் கடனில் இருந்து மீண்டு வருவதற்கும் கட்டணத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    இதன்படி 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான முன்மொழிவு எதுவும் தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணையத்தில் சமர்ப்பித்ததாக தெரியவில்லை. கட்டணத்தை உயர்த்தும் பட்டியலை மட்டும் அதிகாரிகள் கைவசம் வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தான் தேசிய வங்கிகளிடம் மின் வாரியம் மீண்டும் கடன் கேட்டு வருகிறது. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடன் வழங்க இயலாது என்று வங்கிகள் கூறி வருகிறது. இதனால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழலுக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இப்போது உள்ள நடைமுறையை மாற்றி மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தனர்.

    இந்த அறிவிப்பை இன்னும் நடைமுறைப்படுத்தாத சூழலில் மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மின் கட்டணம் உயர்த்துவதை அரசு தள்ளி வைத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×