search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டப் திட்டம்"

    • மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது.
    • டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும்.

    திருப்பூர்:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித்தொழிலின் பங்களிப்பு முக்கியமானது. அதன்படி ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்) அமல்படுத்தப்பட்டது.

    சாய ஆலைகள்,நிட்டிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் பிரிவுகளும், டப் திட்டத்தில் பயனடைந்தன. அதாவது உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எந்திரங்கள் நிறுவ 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டது.

    இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திருத்தப்பட்ட டப் திட்டமாக 2022 மார்ச் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் உயர்த்திய மானியத்துடன் மீண்டும் செயல்படுத்தப்படுமென அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி வழக்கம் போல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் திருப்பூர் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனாவிடமும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    உற்பத்தி சார் ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., 2.0) திட்டம், பின்னலாடை தொழிலுக்கு கை கொடுக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் குறைந்தபட்ச முதலீடு உச்சவரம்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் இறுதியாகாமல் இழுபறி நீடிப்பதால் டப் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

    டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும். உற்பத்தியை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இல்லை. டப் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில்நுட்ப எந்திரங்களை நிறுவிய ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மானிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    புதிய முதலீடு, இயக்க செலவு என 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் திருத்தப்பட்ட டப் திட்ட மானியம் கிடைத்தால் மட்டுமே ஜவுளித்தொழில்கள் புத்துயிர் பெறும். கடந்த ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் மானியத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் பயன்பெற முடியாதவர் டப் திட்டத்தை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த டப் திட்டம் மிகவும் அவசியம் என மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது.
    • திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் சர்தோஷிடம், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும், கோரிக்கையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வைத்தது.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 33 ஆயிரத்து 525 கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 55.32 சதவீதமாக இருக்கிறது.

    சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புது வரவு எந்திரங்களை பயன்படுத்தவும், டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே மீண்டும் டப் திட்டத்தை, 2022 ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களால் பனியன் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொருளாதார சிக்கலை தீர்க்க ஏதுவாக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி சலுகை, 3 மற்றும் 2 சதவீதம் என்பதை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் இருந்தது போல் ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வட்டி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையில் நிலுவை கடன் மதிப்பில் 20 சதவீதம், பிணையமில்லா கடனாக வழங்கப்பட்டது. நூல் விலை உயர்வு, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தற்போதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில் நிலுவை கடன் மதிப்பில் 30 சதவீதம் வரை கடன் வழங்க வேண்டும். அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், திருப்பூர் நகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். திருப்பூரின் ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பில் 1 சதவீத தொகையை, திருப்பூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் விளக்கினர். 

    ×