search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா மரண விசாரணை"

    • ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    • கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

    சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றும் கடைசி வரை எப்படி இருந்தார் என்பதே வெளியே தெரியாமல் மறைந்தும் விட்டார்.

    கண்முன்னே நடப்பதை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்து விட்டு சாவின் உண்மையை கண்டு பிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டது தமிழ்நாடு.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்த போதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் ஆளாளுக்கு ஒரு தகவலை வெளியிட்டார்கள்.

    அவர் இறந்த பிறகும் அதேபோல் தான் இருக்கிறார்கள். அதாவது ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.

    ஆனால் ஓ.எஸ்.மணியன் 4-ந்தேதியே வேளாங்கண்ணி கடற்கரையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

    கே.சி.பழனிசாமியும் 4-ந்தேதியே ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இருவரும் ஜெயலலிதா மறைந்த நாள் டிசம்பர் 4 தான் என்று அடித்து சொல்கிறார்கள்.

    ஏற்கனவே 5-ந்தேதி இரவு ஜெயலலிதா மறைந்தார் என்று ஆஸ்பத்திரி பதிவேடுகளில் கூறியிருந்தாலும் ஆறுமுகசாமி ஆணையம் அதை மறுத்து விட்டது. 4-ந்தேதியே அவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கட்சியினரும் தேதி குழப்பத்தில் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தொண்டர்கள் கூறுகிறார்கள்.

    • ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்.
    • மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி கலந்து கொண்டு பேசினார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்த அறிக்கையில் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்தனர். அதில் சந்தேகம் உள்ளது என நான் எதற்காக கூறினேன் என்றால் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினைதான் மிக முக்கிய பிரச்சினையாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆஞ்ஜியோகிராம் செய்திருக்க வேண்டும். ஆனால் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதுதான் எனது கேள்வி.

    மேலும் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் வெஜிடேஷியன் என்ற கால்சியம் டெபாசிட்டர் மற்றும் இதயத்தில் சிறிய துவாரமும் இருந்துள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்துள்ளது.

    3 மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை தேவை இல்லையென்று கூறினார்கள் என்றும், ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று கூறியதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதில், மருத்துவர்கள் செரியன், கிரிநாத் ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்ததற்கான அறிகுறிகள் இல்லை. மருத்துவர் ஸ்ரீதர் அவ்வாறு நான் சொல்லவில்லை என்று சாட்சியம் சொன்னதன் அடிப்படையிலும், மருத்துவர் மேத்தீவ் சாமுவேல் அறுவை சிகிச்சை வேண்டாம் என சொல்லவில்லை என சாட்சியம் அளித்ததன், அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவனையின் அறிக்கையை நிராகரித்தேன். இதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையை நான் குறைகூறவில்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்துள்ளீர்களே நீங்கள் மருத்துவரா, உங்களால் எவ்வாறு இந்த முடிவுக்கு வர முடிந்தது என்று சிலர் கேட்கின்றனர். நானும் சட்டக்கல்லூரியில் படித்து பலருடன் பழகி உள்ளேன். பல வழக்குகளை சந்திப்பதில் ஏற்பட்ட அனுபவம் தான் என்னால் சரியான காரணங்களை கூற முடிகிறது. அதனால் மாணவர்களும் நன்றாக படித்து பட்டம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அடுத்து பயணிக்கும் இலக்கு நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்.

    ஒரு பெண்ணானவள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் ஒரு உயிரை இந்த உலகத்துக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற சேக்ஸ்பியரின் பொன்மொழிக்கேற்றார்போல், ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால் மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும். மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
    • அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.

    அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

    இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-

    எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.

    இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

    காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.

    எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.

    ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.

    எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.

    வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.

    ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.

    திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.

    ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.

    எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

    அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

    தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.

    எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.

    ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.

    எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.

    அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

    • ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
    • ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

    75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா உயிரிழந்து விட்டதை அறிந்ததும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுபற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இந்தஅறிவிப்பை வெளியிட்டார்.

    இதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 159 பேரிடம் விசாரணை நடத்தி நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இது தவிர அரசு துறை அதிகாரிகளிடமும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    சசிகலாவின் உறவினர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இப்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி 611 பக்க அறிக்கையை தயாரித்தார்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நீதிபதி ஆறுமுகசாமி 5 ஆண்டுகள் வரை விசாரித்து பல்வேறு தகவல்களை திரட்டினார். இதில் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் இடம்பெற செய்துள்ளார்.

    ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க தேவையில்லை என்றும் சென்னையிலேயே சிகிச்சை அளித்தால் போதும் என்றும் சசிகலா கூறியதாகவும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் சசிகலா குடும்பத்தினரே எடுத்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுபோன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா உயிரிழந்த மரண தேதியிலும் குழப்பம் உள்ளது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஒரு டாக்டராக இருந்தும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி, அப்பல்லோ டாக்டர்களையும் விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார். இது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டாக்டர்கள் எஸ்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    இதையடுத்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் சுகாதார முதன்மை செயலாளருக்கு ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டு அதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைப்படி குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதன்படி சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சுகாதார துறையினர் விரைவில் காவல்துறையில் புகார் மனு அளிக்க உள்ளனர். இதனை பின்பற்றியே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட உள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார். இவருக்கு கீழ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் அந்தஸ்திலான அதிகாரிகளும் இடம்பெற உள்ளனர்.

    இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.

    ஜெயலலிதா மரணம் அடைந்து 6 ஆண்டுகளாக ஆகிறது. இதில் 5 ஆண்டுகள் நடந்த விசாரணை கமிஷன் தற்போதுதான் முடிவடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விசாரணை கமிஷன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதோ என்கிற சந்தேகமும் அச்சமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதனை சிறப்பு புலனாய்வு குழு கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே புதிய குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடித்து வரும் மர்மம் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது மரணம் இயற்கையானது இல்லை என்பது போன்ற தோற்றத்தையே ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் உரிய பதில் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயலலிதா மரணத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா உள்ளிட்டோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட இருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
    • என்மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறேன் என்றார் சசிகலா.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சை ஆக்கியது தான் மிகவும் கொடுமையானது.

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.

    இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் புரட்சித்தலைவி அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும், எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்.

    அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை அப்பல்லோ மருத்துவமனையில் செய்து இருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்சை அளிக்க அங்கு கொண்டு சென்றோம் வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை.

    ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

    நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள் அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை யாரும் இனிமேல் ஆதரிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த விசாரணை அறிக்கை 608 பக்கங்களை கொண்டுள்ளது.
    • விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை.

    அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை.

    இதனால் ஜெயலலிதா எப்படி இருக்கிறார்? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று தெரியாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி வாசலிலேயே நாட்கணக்கில் இரவு பகலாக காத்துக்கிடந்தார்கள்.

    இந்த நிலையில் 5.12.2016 அன்று அவர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் வரையிலான சந்தர்ப்ப சூழல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரது மரணம் மிகப்பெரிய விவாத பொருளாகவும் இருந்தது.

    இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் அடையும் வரை துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் சூடு பிடித்தது.

    25.9.2017 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அடுத்த 5 நாட்களில் அதாவது 30.9.2017 முதல் விசாரணை ஆணையம் அதிகாரப்பூர்வமாக செயல்படத்தொடங்கியது.

    விசாரணை ஆணையத்தின் விசாரணை நீண்டு கொண்டே சென்றதால் 14 முறை விசாரணை ஆணையத்துக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆகஸ்டு 24-ந்தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யும்படி அரசு உத்தரவிட்டது.

    அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த விசாரணை அறிக்கை 608 பக்கங்களை கொண்டுள்ளது.

    இந்த விசாரணை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விசாரணை ஆணையம் எய்ம்ஸ் மருத்துவக்குழு அளித்த மருத்துவ அறிக்கையை கவனத்துடன் ஆய்ந்து பார்த்ததில் எய்ம்ஸ் மருத்துவக்குழு சிகிச்சை விவரத்தின் சுருக்கத்தை மட்டுமே அவர்களது கருத்தாக தெரிவித்துள்ளனர் என தெரியவருகிறது. எனவே மருத்துவக்குழுவின் அறிக்கையை விசாரணை ஆணையம் ஏற்கவில்லை.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு வழி வகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையது. மறைந்த முதல்-அமைச்சரை தாமதமின்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு போதுமான அக்கறை எடுத்துக்கொண்டது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த சசிகலா உள்ளிட்ட நபர்களின் நடவடிக்கையில் அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மாறான செயல் எதையும் ஆணையம் கண்டறியவில்லை.

    சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம்.

    இவ்வாறு ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கை பற்றி கடந்த 29.8.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிரான விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரைகள் மீது சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த விசாரணை அறிக்கை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை செயலாளரிடம் வழங்கப்பட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார்.
    • அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ளாத ஓ.பி.எஸ். எப்படியாவது கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வியூகம் அமைத்து வருகிறார். சட்டரீதியாக தனி ஒருவராக நின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சறுக்கலைத் தான் கொடுத்துள்ளது.

    அவரது இன்னொரு முயற்சி சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வுக்குள் இணைக்க வேண்டும் என்பது தான்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் கட்சிக்காக உழைத்து வரும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாக கூறினார்.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க போவதாகவும் அறிவித்தார். ஓ.பி.எஸ்.சின் அழைப்பை தினகரனும் வரவேற்று உள்ளார்.

    ஆனால் இப்போது ஓ.பி.எஸ். தொடங்கி தோற்றுப் போன தர்மயுத்தமே அவரது இந்த முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறி இருக்கிறது.

    அதாவது 2016-ல் ஜெயலலிதா மறைந்ததும் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கு எதிராகவே ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். சசிகலாவை எதிர்த்து கட்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிர வைத்தார்.

    அடுத்த சில மாதங்களில் காட்சிகள் மாறியது. சசிகலா சிறை சென்றார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கை கோர்த்தனர். துணை முதல்-அமைச்சராக இ.பி.எஸ்.-சுக்கு துணையாக இருந்தார்.

    ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை கமிஷன் அறிக்கையும் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்ளிட்டோரின் மீது பங்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தமிழக அரசு தயாராகி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் அன்று வைத்த கோரிக்கை வலுப்பெற்று, பல வடிவங்களில் உருவெடுத்து இப்போது சசிகலாவையும் நெருக்கடிக்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

    இதனால் ஓ.பி.எஸ். சசிகலா இணைவதற்கான வாய்ப்பும் மங்கி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

    • தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது.
    • தேர்தலின்போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.

    கோவை:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தி ஸ்ரீநிதி-பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ. மதியழகன் மகன் கவுசிக்தேவ் ஆகியோரது திருமணம் கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடந்தது.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

    இந்த திருமணத்தை பற்றி ஒரே வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், இந்த திருமணமானது சீர்திருத்த திருமணமாக நடந்தேறி இருக்கிறது. சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல. சுயமரியாதை உணர்வோடு நடந்த திருமணமாகவும், தமிழ்மொழியில் அரங்கேறிய திருமணமாகவும் இந்த திருமணம் உள்ளது.

    இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெறும் என்று சொன்னால் அது சட்டப்படி செல்லுபடியாக கூடிய அங்கீகாரத்தை நாம் அன்றைக்கு பெற்றிருக்கவில்லை.

    ஆனால் 1967-ல் தமிழகத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.ஆட்சி அமைந்தது. அண்ணா முதல்-அமைச்சராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது முதல் தீர்மானமாக நிறைவேற்றி தந்த தீர்மானம் தான், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார். ஆகவே இன்று நடந்த இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லும் என்ற அங்கீகாரத்தோடு நடந்துள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் ஆட்சியினை நடத்தி வருகிறது. தேர்தலின் போது மக்களிடம் என்னென்ன வாக்குறுதிகள் எடுத்து வைத்தோமோ, தேர்தல் அறிக்கையில் என்னென்ன குறிப்பிட்டு காட்டியிருந்தோமோ அவை அத்தனையும் நிறைவேறி விட்டது என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.

    நிச்சயமாக உறுதியாக 70 சதவீதம் நிறைவேறி இருக்கிறது. மீதி 30 சதவீதமும் விரைவில் நிறைவேற்றுவோம். அதனை நிறைவேற்றி காட்டுவோம். அது உங்களுக்கும் தெரியும்.

    மக்களும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இதை நான் குறிப்பிட்டு சொல்வதற்கு முக்கிய காரணம். 4 நாளுக்கு முன்பு தான் கோவை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து அரசு விடுதிக்கு 10 முதல் 15 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பை பெற்றுக்கொண்டு நான் செல்ல 2 மணி நேரம் ஆகியது. சாலையின் இருபுறங்களிலும் பெண்கள், ஆண்கள் என எல்லா தரப்பினரும் என்னை வாழ்த்தி கோஷம் எழுப்பி வரவேற்றனர். ஆங்காங்கே சிலர் மனுக்களையும் கொடுத்தனர்.

    எப்பவும் சிலர் மனுக்களை கொடுக்கும்போது கொஞ்சம் ஏக்கம் வருத்தத்தோடு கொடுக்கும் பாணியை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடம் கொடுத்தபோது மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு மனு கொடுக்கின்றனர். மனு கொடுத்த உடனே நன்றி நன்றி என்று கூறுகின்றனர். ஏதோ முடிந்து விட்டது மாதிரி. மனு கொடுத்த உடனே இது முடிந்து விடும் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அதுதான் நமது திராவிடமாடல் ஆட்சி.

    தேர்தல் அறிக்கையில் முக்கியமானது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தான். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக நாம் சொல்லவில்லை. அவர்கள் கட்சியினரே சொன்னது. அந்த கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். ஜெயலலிதா எப்போது எல்லாம் முதல்வர் பதவியில் இருந்து விலகும் நிலை உருவானதோ அப்போதெல்லாம் முதல்-அமைச்சராக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம் தான்.

    அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கோபத்தோடும், ஆத்திரத்தோடும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று ஆவியோடு பேசுகிறேன் என்றார்.

    அங்கு அமர்ந்து தியானம் பண்ணினார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. நீதி வேண்டும் என அவரே சொன்னார். அவரை சரி செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு ஒப்புக்காக, ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு கமிஷனை அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அந்த விசாரணை கமிஷன் எத்தனை நாட்கள் நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அது ஒப்புக்காக நடந்தது. அப்போது தான் சட்டமன்ற தேர்தலின் போது, நாம் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனை முறையாக நடத்தி, அறிக்கை பெற்று முறையான நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி கூறினோம்.

    4 நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை என்னிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் உள்ளது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வரும்.

    சட்டமன்றத்தில் வைத்து, வெளிப்படையாக உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாக நிறைவேற்றி காட்டுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

    தூத்துக்குடியில் நடந்த சம்பவம் குறித்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படி சம்பவம் நடந்தது டி.வி.பார்த்து தெரிஞ்சுகிட்டேன் என்று சொன்னார். அது தொடர்பான விசாரணை அறிக்கையும் என்னிடம் வந்துள்ளது. அதுகுறித்தும் விவாதித்தோம். அந்த விவகாரங்கள் அனைத்தையும் சட்டமன்றத்தில் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், நாசர், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
    • ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

    கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய பாஸ்கர், தலைமை செயலாளராக பணிபுரிந்த ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் பரிந்துரையை அடுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதில் எடுக்கப்போகும் முடிவுகள் என்ன என்பதை சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 'சிறப்பு புலனாய்வு குழு' புதிதாக அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த குழு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு கீழ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த குழுவினரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள். இதன்மூலம் சசிகலா, விஜயபாஸ்கர், ராம் மோகன்ராவ், டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் புதிய குழு விசாரணை நடத்தி அதுதொடர்பாக அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும். இதன் பிறகே ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

    தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.

    கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
    • எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

    சென்னை:

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டார்.

    ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சென்னை எழிலகத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தனி அலுவலகம் உருவாக்கப்பட்டது. அங்கு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அலுவலர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

    இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் 2019ம் ஆண்டு ஏப்ரல் 26-ந்தேதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்குழு நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை விடுத்தது.

    இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டது. இதேபோன்று பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதால் ஆணையத்துக்கு தமிழக அரசு 14 முறை கால நீட்டிப்பு வழங்கியது.

    ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை 3 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டத்தில் 13 மாதங்கள் 147 அமர்வுகளில் விசாரணை நடந்தது. அப்போது 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2வது கட்டத்தில் 3 ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டு தடை ஆணை விலக்கி கொள்ளப்பட்ட பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் மூன்றாவது கட்டமாக விசாரணை தொடங்கியது. சில வாரங்களில் 3-வது கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

    ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது. முதலில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத்தான் ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்து இருந்தது. அப்பல்லோ மருத்துவமனை கேட்டுக்கொண்டபடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுமார் 50 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை 600 பக்கங்களாக அதிகரித்தது.

    அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நல பாதிப்புகள் இருந்தன?, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததற்கான காரணம் என்ன?, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?, ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த பல்வேறு உடல்நல பாதிப்புகள் தான் அவரது மரணத்துக்கு முழு காரணமா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அடுத்தகட்டமாக இந்த அறிக்கை தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். அனேகமாக நாளை மறுநாள் (29ந் தேதி) நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதன்பிறகு மேல் நடவடிக்கைக்காக சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது.
    • ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு .

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.

    முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடையும் விதித்தது. அதன்பிறகு மருத்துவ குழுவை அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் பிறகு தான் மீண்டும் விசாரணை துரிதமாக நடைபெற்றது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித தவறுகளும் இல்லை.

    உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை காலை 10.30 மணி அளவில் தாக்கல் செய்கிறார். இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×