search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வாக்கு"

    வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும் என சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி கூறியுள்ளார். #SupremeCourt #IndiraBanerjee
    புதுடெல்லி:

    நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.



    கடந்த 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்) ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.

    அப்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வக்கீல்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வக்கீல்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.

    இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார்.

    பெண் நீதிபதியின் இந்த குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #SupremeCourt #IndiraBanerjee
    பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் தினமும் தேய்ந்து கொண்டே வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
    ஐதராபாத்:

    4 ஆண்டு ஆட்சி நிறைவு செய்தது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறி விட்டதால் நாங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மறுசீரமைப்பு சட்டப்படி ஆந்திர மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.

    ஆனால் உறுதி அளித்தபடி சட்ட விரோதமான முறையற்ற மாநில பிரிவினைக்கு பிறகு எந்தவித நிதி உதவியும் வழங்கவில்லை. இதனால் மாநிலத்துக்கான புதிய தலைநகரம் அமராவதி மற்றும் பொல்லாவரம் திட்ட பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன.

    வளர்ச்சியில் ஆந்திர மாநிலம் நாட்டின் நம்பர் ஒன் அதாவது முதல் மாநிலமாக திகழ பா.ஜனதா விரும்பவில்லை. அதனால் மாநில வளர்ச்சிக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. மேலும் எங்களது (தெலுங்கு தேசம் கட்சியின்) பரம எதிரியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    எனவேதான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை.

    மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் பிரச்சினைகளை கையாள்வதில் காங்கிரஸ் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்கிறது.

    இத்தகைய செயல்பாடுகளால் தான் 2 பிரதமர்கள் உயிரிழக்க நேரிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் கருப்புக் கொடி காட்டுகிறார்கள். அதை டெல்லி புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் தினமும் தேய்ந்து கொண்டே வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும். வரும் தேர்தலில் மாநில கட்சிகள் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் புதிய அரசை அமைக்கும்.

    மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியில் தோல்வி அடைந்து விட்டது. சிறப்பாக செயல்பட்டு இருந்தால் பொருளாதார வளர்ச்சி மிகவும் மேம்பட்டு இருக்கும். 6 அல்லது 7 சதவீதம் என இருந்திருக்காது.



    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மிகப்பெரும் சவாலாக கருதவில்லை. வர இருக்கிற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.

    எங்களது அர்ப்பணிப்பு மிகுந்த சேவை மற்றும் அனைத்து துறை வளர்ச்சியிலும் புரிந்த சாதனைகளை கருத்தில் கொண்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். அதை விடுத்து கறை படிந்த பல வழக்குகளில் தொடர்புடைய தினமும் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி கொண்டிருக்கும் நபருக்கு (ஜெகன்மோகன் ரெட்டிக்கு) ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்க மாட்டார்கள்.

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவதில் நான் பின் வாங்கி விட்டதாக பா.ஜனதாவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டுகின்றன. நான் ஒருபோதும் அதில் இருந்து விலகவில்லை. சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறேன்.

    அதை வெறுவதில் மக்களும் உணர்வுபூர்வமாக உள்ளனர். மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவதில் தீவிரமாக பாடுபட்டு வருகிறோம்.

    எனது 4 ஆண்டு கால ஆட்சியில் மாநில நலன் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து இருக்கிறேன்.

    தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஓய்வூதியங்கள் மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பெருமளவில் ரூ.24 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவி குழு பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு வருடத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சிமெண்ட் கான்கிரீட் ரோடுகள் போடப்படும். இதுவரை இரட்டை இலக்க அதாவது 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் உள்ளனர்.

    மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம். ராயலசீமாவில் கியா மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ ஹோண்டா தொழிற்சாலைகள் உள்ளன. விஜயவாடாவில் அசோக்லைலேன்ட் நிறுவனம் இயங்குகிறது. அம்பானி சகோதரர்கள் தொழில் முதலீடு செய்ய உள்ளனர்.

    பில்கேட்ஸ் விசாகபட்டினம் வந்து பார்வையிட்டார். எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் ஆந்திராவில் பல முதலீடுகள் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

    மாநில தலைநகரம் அமராவதி அமைப்பதில் தாமதம் எதுவும் இல்லை. இது மிகப்பெரிய திட்டம், உலக தரம் வாய்ந்த நகரத்தை உருவாக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அதற்கான திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வருடத்தில் 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    சட்டசபை, தலைமை செயலகம், ஐகோர்ட்டு கட்டிடங்களுக்கான டிசைன்களை ஜப்பான் நிறுவனம் வழங்கியது. அது சிறப்பாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. தற்போது லண்டனில் இயங்கும் பாஸ்டர் ஆன் பார்ட்னர்ஸ் நிறுவனம் சிறப்பான டிசைன் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் கட்டிடங்கள் கட் டப்பட்டு வருகின்றன.

    சாலைகள் மற்றும் பொதுத்துறைகளுக்கான கட்டிடங்கள் கட்ட டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
    ×