search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புக்கட்டுரைகள்"

    • 14-ம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
    • உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

    உலகெங்கும் ஜூலை மாதம் 20-ம் நாள் உலக சந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கியநாடுகளின் பொதுச்சபை இந்த நாளை உலக சந்திர தினமாகக் கொண்டாடுவதற்கான தீர்மானத்தை 2021-ல் நிறைவேற்றியது.

    சந்திரனால் ஈர்க்கப்படாத மனிதரே இல்லை. காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சந்திரனைச் சுட்டிக் காட்டி அம்புலிமாமா வா வா என்று அழைத்து வந்திருக்கிறோம். காதலன் காதலியைப் பார்த்து, 'வதனமே சந்திர பிம்பமோ' என்று சந்திரன் போன்ற முகம் என்று வர்ணித்து மகிழ்கிறான்.

    காலம் காலமாக இருந்து வரும் இந்தக் கவர்ச்சியினால் விண்வெளி யுகத்தில் மனிதன் சந்திரனில் காலடி பதிக்கத் திட்டமிட்டான்; வெற்றியும் பெற்றான். இனி மிகப் பெரும் வெற்றிகளையும் பெறப் போகிறான். ஆகவே தான் இந்தக் கொண்டாட்டம்.

    சந்திர மனிதன்!

    உலக சந்திர தினமாக ஜூலை 20 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது?

    இந்த நாளில் தான் 1969-ம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனித குலத்தின் பிரதிநிதியாக முதன் முதலில் சந்திரனில் தன் காலடித் தடத்தைப் பதித்தார்.

    அமெரிக்காவின் பெருமுயற்சியின் காரணமாக சந்திரனுக்கு விண்கலத்தில் பயணித்து அங்கு இறங்கி தன் காலடியைப் பதித்த அவர், "மனிதனுக்கு அது ஒரு சிறிய தடம். மனிதகுலத்திற்கு பிரம்மாண்டமான தாவல்" என்று குறிப்பிட்டார். மொத்த உலகமும் அவரது இந்தக் கூற்றை ஆமோதித்தது.

    ஓஹையோவில் 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி பிறந்த ஆர்ம்ஸ்ட்ராங் வானில் பறப்பதில் தீரா ஆசை கொண்டார். தன் வீட்டிலேயே ஒரு சிறிய விண்ட் டனலை அமைத்து விமானங்களில் சிறிய மாதிரிகளைச் செய்து பார்ப்பது அவரது பொழுது போக்கு. படிப்பை முடித்த பின்னர் விமான நிறுவனத்தில் சேர்ந்த அவர் இரண்டு லட்சத்தி ஏழாயிரத்து ஐநூறு அடி உயரம் பறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    1962-ல் விண்வெளி வீரர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட அவர் 1969-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சந்திரனை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். உலக சாதனையை நிகழ்த்தினார்.

    எதற்காக சந்திரனுக்குப் பயணம்?

    எதற்காகப் பெரும் பொருட்செலவில் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும்?

    மனித குலம் நசித்து விடாமல் நீடித்து இருக்க வேண்டும் என்ற அக்கறையினால் தான்!

    நாளுக்கு நாள் பெருகி வரும் ஜனத்தொகை, பூமியின் ஆதார வளங்களான நிலம், நீர், காற்று ஆகியவற்றை அசுத்தப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தல், ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் ஏற்படும் போரினால் மனித குல நாசம் ஆகியவை போன்ற காரணங்களினால் மனிதன் இன்னொரு கிரகத்தில் சென்று வாழ்வதற்கான முயற்சி தேவை என்று ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கருத்தைத் தெரிவிக்கின்றனர்.

    பிரபல திரைக்கதை வசனகர்த்தா வான சார்லஸ் பிரோசர், அடுத்த நூற்றாண்டு முடிவதற்குள் மனித குலம் இருக்குமா என்று கவலைப்பட்டு 'கையாசெலின் - சந்திரனுக்குச் சென்று குடியேறி பூமியைக் காப்போம்' என்ற படத்தை எடுத்தார். உலகெங்கும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் விண்வெளிக்குச் சென்று குடியேறினாலொழிய இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட மனித குலம் தாக்குப் பிடிக்காது என்றார். ஆனால் இதை மறுத்த சார்லஸ் பிரோசர் ஆயிரம் ஆண்டுகள் என்பது மிக மிக அதிகப்படியான காலம். உடனடியாக நாம் விண்வெளியில் குடியேற வேண்டும்" என்றார்.

    விண்வெளியிலும் சென்று ஆதிக்க மனப்பான்மையைக் கொள்ளக் கூடாது என்று விண்வெளி உடன்பாடு ஒன்று சர்வதேச அளவில் ஒப்பந்தமாகி உள்ளது. இதை ஏராளமான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

    இதன் படி ஏராளமான பாதுகாப்பு விதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    நான்கு நாடுகளில் ஒன்று இந்தியா!

    சந்திரன் மீது கண்ணைப் பதித்து ஆக்கபூர்வமான வெற்றிகளைப் பெற்றுவரும் நாடுகள் நான்கு. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியவையே அந்த நாடுகள்.

    முதலில் விண்வெளிப் பயணம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ரஷியா. அதைத் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் விண்வெளி ஆய்வையும் பயணத்தையும் மேற்கொண்டு வெற்றி கண்டது அமெரிக்கா. சீனா தனது உள்ளார்ந்த ஆசையால் விண்கலங்களைத் தனியே அனுப்பி வெற்றிகளைப் பெற்றது.

    இந்த விண்வெளிக் களத்தில் இறங்கிய இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய இரு கலங்களை சந்திரனை ஆராய அனுப்பியது.

    2008 அக்டோபர் 22-ந்தேதி செலுத்தப்பட்ட சந்திரயான் 1 மற்ற நாடுகள் கண்டுபிடிக்காத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தது. சந்திரனில் நீர் அணுத்துகள்கள் உள்ளன என்பதை முதன் முதலாக இந்திய விஞ்ஞானிகளே கண்டுபிடித்து உறுதிப்படுத்தினர்.

    சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

    இப்போது 2023-ல் சந்திரயான்-3 ஜூலை

    14-ம் நாள் வெற்றிகரமாக இஸ்ரோ தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

    40 நாட்கள் பயணப்பட்டு சந்திரனில் மெதுவாகத் தரை இறங்கும் சந்திரயான் -3 அரிய பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வெற்றியே பெறுவோம்.

    சந்திர வளம்!

    சந்திரனில் குடியிருப்பு அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பிரம்மாண்டமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

    முதலில் விண்வெளியில் பறப்பதற்கே பெரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜீரோ கிராவிடி எனப்படும் எடையற்ற நிலையில் வாழ்வது என்பதே ஒரு அரிய காரியம். சாப்பிடுவது, உறங்குவது, ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தொடுவது என்பது கூட எளிதில் முடியாத காரியம். மனித குல சந்ததி பெருக்கத்தை எப்படிச் செய்ய முடியும்? விண்ணில் கர்ப்பமுற்று குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகள் காண முயன்று வருகின்றனர்.

    சந்திரனின் மீது சீனா காட்டும் தீவிர அக்கறையைப் பற்றி ஆராயப் புகுந்த உலக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டு பிரமித்தனர்.

    பூரண எரிபொருள் - பெர்பெக்ட் யியூயல் - எனப்படும் ஹீலியம்- 3 சந்திரனில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.

    எதிர்காலத்தில் எந்த நாடுகளிடம் ஹீலியம் - 3 இருக்கிறதோ அவையே வல்லரசு நாடுகள். ஆகவே தான் சீனா சந்திரனைக் 'கைப்பற்ற' தீவிரம் காட்டுகிறது.

    இந்த ஹீலியத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜெரால்ட் குல்கின்ஸ்கி. இவரை அமெரிக்கா அழைத்தது. நாசா தனது ஆலோசனைக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டது.

    ஹீலியம் - 3 சந்திரனில் ஒரு மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறது என்பதைச் சொன்னவர் குல்கின்ஸ்கி தான்.

    பூமியில் கிடைக்காத இந்த அரிய எரிபொருளை யார் முதலில் சந்திரனில் இருந்து கொண்டு வருகிறார்களோ அவர்களே உலகை ஆளப்போகும் மன்னர்கள்!

    ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு சொல்லலாம். வெறும் நாற்பதே நாற்பது மெட்ரிக் டன் ஹீலியம் - 3-ன் ஆற்றல் மூலமாக அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சக்தியைப் பெறலாம்!

    சந்திரப்பரப்பை 700 டிகிரி சென்டிகிரேட் அளவு உஷ்ணப்படுத்தினால் போதும், ஹீலியம் வாயு தானாகப் பிரியும். அதைப் பிடித்துக் குளிர வைக்க வேண்டியது தான்.

    இது மட்டுமல்ல. மலைக்க வைக்கும் இதர தாது வளங்களில் முக்கியமான பிளாட்டினமும் சந்திரனில் அபரிமிதமாக உள்ளது. லட்சக்கணக்கான விண்கற்கள் சந்திரனின் மீது வெகு காலம் மோதியதால் ஏற்பட்ட பிளாட்டின பரப்பு, சந்திரனை தங்க முலாம் பூசிய சந்திரப் பரப்பு என்று கவிஞர்கள் சொல்லி வரும் வர்ணனையை மாற்றி, பிளாட்டின முலாம் பூசப்பட்ட சந்திரன் என்று சொல்லுமளவு மாற்றி இருக்கிறது.

    இந்த பிளாட்டினத்தைச் சந்திரனில் இருந்து கொண்டு வந்தால் 'ரேர் எர்த் மார்க்கெட்' எனப்படும் அரியவகைச் சந்தைப் பொருள்களில் ஒன்றாக இது இருக்கும்.

    குறைந்தபட்ச மதிப்பீடாக ஆண்டிற்கு சுமார் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினத்தை உலகில் விற்க முடியும். உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

    சந்திரன் உலகினர் அனைவருக்கும் பொது!

    இப்படி அரிய வளத்தைக் கொண்டிருக்கும் சந்திரன் அனைவருக்கும் பொது என்ற கருத்தைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டன!

    ஆனால் விசித்திரத்தில் விசித்திரம் என்னவெனில் இப்போதே ல்யூனார் எம்பசி என்ற நிறுவனம் சந்திரனில் பிளாட் போட்டு பூமியில் விற்கிறது. இந்த ரியல் எஸ்டேட் விற்பனையை 'அன் - ரியல் எஸ்டேட்' (Unreal Estate) என்று பலரும் கிண்டல் செய்தாலும் வாங்குபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் - தங்கள் சந்ததியினருக்காக!

    இந்த நிறுவனத்துடன் சண்டை போட்டு ஒரு விவசாயி, சந்திரன் தன்னுடையதே என்று போட்டிக்கு வந்தார். அவர் கூறிய காரணம் அனைவரையும் அசத்திவிட்டது.

    250 ஆண்டுகளுக்கு முன்னர் பிரஷியா நாட்டை பிரடெரிக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மற்றவரின் நோய்களைத் தீர்க்க வல்ல அபூர்வ ஆற்றல் இருந்தது. அவர் தனது அபூர்வ ஆற்றலால் மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிரடெரிக் மன்னர் அந்த விவசாயிக்கு சந்திரனையே தானம் செய்து சாசனம் ஒன்றையும் வழங்கினார்.

    அந்த விவசாயின் பரம்பரையில் தான் வந்ததால் தனக்கே சந்திரன் சொந்தம் என்று சந்திர சாசனத்தைக் காட்டினார் அந்த விவசாயி.

    பெண்மணிகள் விரும்பும் சந்திரன்!

    வீராங்கனை கல்பனா சாவ்லாவை அறியாதவர் இருக்க முடியாது. அடுத்து இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்சும் விண்வெளி வீராங்கனை தான். இன்னும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உண்டு.

    நமது பெண்மணிகளுக்குச் சந்திரன் என்றால் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. நிலவில் தேன் நிலவு கொண்டாட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

    முதன் முதலில் விண்வெளியில் சுற்றுலா சென்ற முதல் பெண்மணியாகத் திகழ்கிறார் அனூஷே அன்சாரி. இவரே இப்படிப் பயணம் மேற்கொண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி ஆவார். முதலாவது ஈரானியப் பெண்மணியும் இவரே.

    விண்வெளி சென்ற வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் கலத்தை விட்டு வெளியே வந்து நடந்தும் காட்டி விட்டனர்.

    நவகிரகங்களில் சந்திரன்

    இந்திய நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை நவ கிரகங்களும் 27 நட்சத்திரங்களுமே.

    சந்திரன் மனதிற்கு அதிபதி என்று கூறுகின்றன நமது அறநூல்கள்.

    இந்த மனதிற்கு அதிபதியை இந்தியா வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நாம் பெருமை கொள்வது தவறா, என்ன?

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
    • நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை....

    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான்.

    ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார், அதனால் அவர் தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் செய்கிறார்.

    இந்த கடின உழைப்புக்கு மரியாதை அளிக்கும் வகையிலும், அன்னையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என எல்லாவற்றிக்கும் ஒரு தினம் இருக்கையில், தாய்க்கு அடுத்தபடியாக போற்றப்படும் தந்தைக்கு ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

    குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

    குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை. ஆம், 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! நீ தந்தை ஆகும் வரை, உன் தந்தையின் அருமை உனக்கு தெரியாது.

    தந்தையர் தினத்தை கொண்டாடுவதற்கு இரண்டு முக்கிய கதைகள் உள்ளன.

    உலகில் முதல் முறையாக தந்தையர் தினம் 1910 ஆண்டு ஜூன் 19-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய் இல்லாமல் தந்தையில் அரவணைப்பில் வளர்ந்த பெண் ஒருவர் தந்தையர் தினத்தை தோற்றுவித்தார்.

    சொனாரா ஸ்மார்ட் டாட், அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு நாள் அன்னையர் தினத்தை கொண்டாடிய பின், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்தார். இவரின் தாய் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் உயிரிழந்துவிட்டார். அதன் பின் ஆறு குழந்தைகளையும் தந்தை பாசத்துடன் வளர்த்தெடுத்தார். இதனால், இவர் தனது தந்தையை கொண்டாட முடிவு செய்தார்.

    முன்னதாக, 1907ம் ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் சிக்கி 362 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1908 ஆண்டு மேற்கு விர்ஜினியா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தையர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நடத்தப்பட்ட முதல் நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த சம்வபத்திற்குப் பிறகு, சொனாரா ஸ்மார்ட் டாட் என்பவர் தந்தையர் தினத்தை தேசிய நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்தார். உள்ளூர் சமுதாயம் மற்றும் அரசாங்கத்திடம் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என கோரி பலமுறை மனு கொடுத்து வந்தார்.

    இவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வாஷிங்டன் 1910, ஜூன் 19-ந்தேதி முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தந்தையர் தின கொண்டாட்டத்தை நடத்த அனுமதி வழங்கியது.

    கொண்டாடும் முறைகள்:

    தந்தையர் தினத்தை ஒவ்வொருவரும் கொண்டாடும் முறை உள்ளது. இந்த நாளில் பலர் நல்ல உணவை உண்பதற்காக வெளியே செல்கிறார்கள். குழந்தைகள் தங்கள் தந்தைக்கு பரிசுகளை வழங்குவார்கள், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள், அட்டைகள் மற்றும் பூக்களை வழங்குவார்கள்.

    இந்த நாளில், ஒவ்வொரு குழந்தையும் தனது தந்தைக்கு நன்றி செலுத்துகிறது.

    தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பவருக்கும் தாய்க்கு இணையான மரியாதை கிடைக்க வேண்டும்.

    எப்படி அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறோமோ, அதே போன்று தந்தையின் அன்பை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும்.

    தன் துக்கத்தையும், வேதனையையும் வெளிக்காட்டாமல் தன் கடமைகளை எல்லாம் செய்பவர் தந்தை. அம்மாவுக்குப் பிறகு நம் மனதுக்கு மிக நெருக்கமானவர் என்றால் அது நம் அப்பாதான்.

    தந்தையின் அன்பு அன்னையைப் போல் இல்லை, ஆனால் அப்பாதான் நம்மை உள்ளிருந்து வலிமையாக்குகிறார்.

    உலகில் உள்ள நல்லது கெட்டது பற்றி எங்கள் தந்தை நமக்கு பாடம் நடத்துகிறார். நம் தந்தையின் கை நம் நெற்றியில் இருக்கும் வரை நாம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

    எப்பொழுதும் துக்கத்தை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறார்.

    நாம் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

    குடும்பத்தில் சமத்துவத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் உங்கள் இருப்பு முக்கியமானது. ஒருவர் வளரும்போது அவரைப் போல இருக்கத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தி, தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் தந்தைகள் ஒவ்வொருவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்.

    • பல ரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை!
    • ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

    நாம் அனைவருமே நட்சத்திர மனிதர்கள் தாம்! நாம் எல்லோரும் நட்சத்திரங்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கிறோம் - என்ற ஆகப்பெரும் அமெரிக்க இசைக்கலைஞரான மோபியின் பாடல் உலகையே கலக்கி ஆட்டி வைத்தது அனைவரும் அறிந்ததே

    நம் உடலில் உள்ள கார்பன், நைட்ரஜன் அணுக்கள் மற்றும் இதர மூலகங்கள் அனைத்தும் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்ற தலைமுறை நட்சத்திரங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நவீன அறிவியலும் ஒத்துக் கொண்டிருக்கிறது.

    வானில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் தட்ப வெப்ப நிலையையும் , மனிதர்களின் மனோநிலையையும் பாதிக்கிறது என்பதையும் அறிவியல் ஒப்புக் கொண்டுவிட்டது.

    இதே கருத்தை இந்திய நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துக் கூறியது தான் அதிசயம்.

    புவியில் உள்ள மனிதர்களைப் பாதித்து நல்லதையும் கெட்டதையும் நல்கும் 28 நட்சத்திரங்களில் காலப்போக்கில் நமது சுழற்சியிலிருந்து வெளியில் சென்று விட்ட அபிஜத் நட்சத்திரத்தை விட்டு விட்டு மீதியுள்ள அஸ்வினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களை நமக்குப் பலன் தரும் தாரகைகளாக நமது அறநூல்கள் பட்டியலிட்டுள்ளன.

    சங்க காலத் தமிழகத்தில் வானவியல் உச்சகட்டத்தில் இருந்ததை அதில் நாம் காணும் சுமார் 150க்கும் மேற்பட்ட அதிசயிக்கத்தக்க அற்புதமான வெவ்வேறு பாடல்களில் வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் தரும் உண்மைகளோ நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

    இந்தப் பின்புலத்துடன் வானில் ஒளிரும் சில நட்சத்திர ரகசியங்களையும் அதிசயங்களையும் பார்க்கலாமா?

    திருவாதிரை நட்சத்திரம்: 27 நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியைக் கொண்டிருக்கின்றன. அவை திருவாதிரையும் திருவோணமும் தான். திருவாதிரை சிவபிரானுக்கும் திருவோணம் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கும் உரியது.

    பல ரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை! பிரம்மாண்டம் என்றால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம்? இரண்டுகோடியே ஐம்பது லட்சம் சூரியன்களைத் தன்னுள்ளே அடக்கி வைக்கக் கூடிய அளவு அது பெரியது. சூரியனோ பூமியை விட பதிமூன்று லட்சம் மடங்கு பெரியது. அப்படியானால் திருவாதிரை பூமியை விட எத்தனை கோடி மடங்கு பெரியது! கணக்கிட்டுப் பாருங்கள்!!

    பீடல்ஜியஸ் (Betelgeuse) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திருவாதிரையானது, செக்கச் செவேலென்று ஒளிரும் உக்கிரமான ஒரு நட்சத்திரம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி வர்ணிக்க முடியும்? அமெரிக்காவில் மவுண்ட் வில்சன் ஆப்ஸர்வேடரியிலிருந்து நூறு அங்குல டெலஸ்கோப்பை வைத்து இதைப் பார்க்கும் விஞ்ஞானிகள், "அது ஒளிர்கிறது! பல கோடி சூரியன்கள் ஒன்றாக ஆகி எரிவது போல எரிகிறது" என்கின்றனர்.

    முக்கண்ணன் தனது உக்கிரமான பார்வையினால் மன்மதனை எரித்தான் என்பதை பட்டி தொட்டிகளில் எல்லாம் காலம் காலமாக நாம் கேட்டு வரும் வில்லுப்பாட்டு கூறுகிறது. காம தகனம் கதையைக் கேட்காதோர் இல்லை!

    கடுமையான கோடைகாலம் முடிந்தவுடன் வசந்த காலம் வர காம உணர்வும் எழுகிறது. இந்த உணர்வு எழுவது எப்போது? சூரியன் மறைந்தவுடன் தனுர் ராசிக்குரிய நட்சத்திரங்கள் எழுகின்ற வேளையில் தான்.

    வில்லுடனும் அம்புடனும் குறிக்கப்படுவது இந்த தனுசு ராசி. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களே மலர் கணையைத் தொடுக்கும் வில்லுடன் கூடிய மன்மதனைக் குறிக்கிறது.

    கீழ்வானத்தில் அதாவது கிழக்கே திருவாதிரை நட்சத்திரம் எழ மேல் வானத்தில் தனுர் ராசி நட்சத்திரங்கள் மறைகின்றன, ருத்ரனின் பார்வை பட்டு மன்மதன் மறைகிறான்; எரிந்து போவதாகப் புராணங்கள் கூறுகின்றன! எப்போதும் தேவ- அசுர நட்சத்திரங்கள் நேர் எதிரெதிராக 180 டிகிரியில் இருப்பதை நாம் அறிந்தால் மன்மதனின் மறைவு நமக்கு நன்கு புரிய வரும்.

    இதை ரெட் ஜெயண்ட் என்று அனைவரும் புகழ்கின்றனர். எகிப்திய பிரமிடிற்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஓரியன் மிஸ்ட்ரி உள்ளிட்ட பல ஆங்கில நூல்கள் விவரிக்கின்றன. படித்தால் பிரமிப்பு தான் ஏற்படும்!

    இது 642 ஒளி ஆண்டுகள் தூரத்தில் புவியிலிருந்து இருக்கிறது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஆறு லட்சம் கோடி மைல்கள் ஆகும்!

    விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கைப் போட்டால் ஒரு ஆண்டிற்கான மைல்களாக ஒளி செல்லும் தூரமாக வருவது இது!

    திருவோணம் நட்சத்திரம்: "மூவுலகும் ஈரடியா முறைநிரம்பா வகை முடியத்

    தாவிய சேவடி" கொண்ட திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கேட்கிறார்!

    மகாபலி என்ற அசுரன் இந்திரனுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணு புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் 12ஆம் நாள் அபிஜித் என்ற சுபயோக வேளையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் வாமனனாக குள்ள வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அங்கு மகாபலி அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க மூன்று அடி நிலம் வேண்டும் என்கிறார் வாமனன். உடனே தந்தேன் என்கிறான் மகாபலி.

    தனது முதல் இரு அடிகளால் பூமியையும் ஏனைய அனைத்து உலகங்களையும் அளந்த வாமனன் மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்கிறார். அதற்குத் தன் தலையில் அந்த அடியை வைக்குமாறு மகாபலி சொல்ல மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து அவனைப் பாதாள லோகம் சேர்க்கிறார் வாமனனான மகாவிஷ்ணு.

    இது மலையாளத்தில் ஓணம் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதை மகாவிஷ்ணு.

    ஆங்கிலத்தில் அக்கிலா எனப்படும் நட்சத்திரத் தொகுதி திருவோணத்தைக் குறிக்கிறது.

    இதன் மேல் பக்கத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும் மூன்று நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன.

    இந்த நட்சத்திரத் தொகுதியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பால் வீதி என்பது காசியோபியா நட்சத்திர மண்டலத்தில் ஆரம்பித்து சிரியஸ் நட்சத்திரத்தைத் தாண்டி தென் மண்டலத்தில் போகிறது.

    பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் இது பரவி இருக்கிறது. இந்தப் பால்வீதி மண்டலத்தைப் பார்த்துப் பிரமித்துப் போன விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், "இருண்ட வானத்தில் தங்கத் துகள்களை இரு கைகளாலும் ஒருவன் வாரி இறைத்தது போல பால் வீதி மண்டலம் உள்ளது" என்கிறார்.

    அறிவியல் வியக்கும் இந்தப் பால்வீதியே அனந்தசயனம் அதாவது பாம்பணை! கற்பனைக்கெட்டா தூரம் இந்த லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் படுக்கை போலப் பரவி இருப்பதை வானில் பார்ப்பதே தனி ஒரு ஆனந்தம் தான்!

    இங்குள்ள முக்கிய நட்சத்திரங்களே குடை விரித்த பாம்பு போலத் தோற்றமளிக்கின்றன! அங்குள்ள வானநடுவரையால் கடக்கப்படும் திருவோண நட்சத்திரமே திருமால் வாமனாக அவதரித்த நட்சத்திரம்.

    கருடனின் உருவத்தில் மூன்று நட்சத்திரங்களாக தலைப்பகுதியில் உள்ளவையே வாமனனின் பாதங்கள். இப்படி புராணத்தையும் அறிவியலையும் இணைக்கும் அற்புத நட்சத்திரமே திருவோணம்.

    இந்த நட்சத்திர விசித்திரத்தைப் பார்த்த குலசேகரத்தாழ்வார், "மாதவனை வணங்குகிறேன். எவருடைய நட்சத்திர வடிவமானது குளிர்ந்த அலைகளையுடைய பாற்கடல் போலப் பரந்திருக்க, அதன் நடுவே பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த மாதவனை வணங்குகிறேன்" என்கிறார். - முகுந்தமாலை செய்யுள் 39)

    கந்தனை வளர்த்த கார்த்திகை!: தமிழர் தம் தனிப்பெரும் தெய்வம் முருகன். முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆறு முகங்களும் பன்னிரெண்டு கரங்களும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகனே தமிழ் தந்த முருகன்.

    கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி ஆகிய ஆறு நட்சத்திரங்களே அவைகள்!

    கார்த்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி. கிருத்திகா என்றால் வெட்டும் கருவி என்று பொருள். தீ நாக்குப் போலத் தோற்றம் அளிப்பவை இந்த ஆறு நட்சத்திரங்களூம்.

    பிளையாடிஸ் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இந்த நட்சத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனம் ஆகும் நாட்களே வருடத்தில் மிகவும் உஷ்ணமான நாட்கள். இதை கார்த்தி நாட்கள் என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்.

    சூரியனுக்கே இப்படி கூட்டு சேர்க்கையாலேயே அதிக வெப்பம் தரும் இதன் உண்மையான உஷ்ணம் எப்படி இருக்கும்? கற்பனை செய்ய வேண்டியது தான்.

    அழுக்குகளையும் பொய்யையும் சுட்டுப் பொசுக்கும் இந்த நட்சத்திரம் ஒளி, தீபம் ஆகியவற்றுடன் இணைத்துப் பேசப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்வில் ஒளிமயமான ஏற்றத்தைக் குறிக்கும் நாள்!

    சங்க இலக்கியத்தில் தனியொரு இடத்தை இந்த நட்சத்திரம் பெறுகிறது.

    அகஸ்திய நட்சத்திரம்: கானோபஸ் என்று மேலை நாட்டினரால் குறிப்பிடப்படும் அகத்திய நட்சத்திரம் எப்போதெல்லாம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் ஒரு பூ மலரும். அதுவே அகத்திப்பூ. அந்தக் கீரையே அகத்திக் கீரை.

    "தூய கடல் நீரை முழுது உண்டு அது துரந்தான்" என்று கவிச்சக்கரவர்த்தி கம்பனால் வர்ணிக்கப்படும் அகத்தியர் தெற்கு வான மண்டலத்தில் தெரியும் நட்சத்திரம்.

    சூரியன் சிம்ம ராசியில் மறையும் போது கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இதைக் கண்ட நமது முன்னோர் அவருக்கு கும்ப முனி என்ற பெயரை இட்டனர்.அகத்தியர் தோன்றியவுடன் சரியாக மழைக்காலம் முடிகிறது. ஆகவே தான் மழைக்காலம் நீங்கிய உடனேயே தோன்றும் அகத்தியர் நீரைக் குடித்து விட்டார் என்ற வழக்கு வந்தது. இன்னொரு அறிவியல் கூற்றுப்படி எப்போதெல்லாம் அகத்திய நட்சத்திரம் பூமியை நெருங்குகிறதோ அப்போதெல்லாம் கடல் நீர் கூடுதலாக வற்றுகிறது.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • 1993-ம் ஆண்டு ஆ ஒக்கடு அடக்கு என்ற படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார்.
    • கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்த போது குஷ்பு, ரம்பாவை நடுவர்களாக ஏற்பாடு செய்தோம்.

    ரம்பா...

    அழகிய லைலா...

    இவள் மன்மத புயலா...

    என்ற பாடலுக்கு போட்ட ஆட்டத்தை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விடுவார்களா என்ன? ஆந்திராவில் இருந்து தமிழ் பட உலகுக்குள் நுழைந்த விஜயலட்சுமிதான் ரம்பா. அவர் முதன் முதலில் நடித்தது தெலுங்கு படம்.

    1993-ம் ஆண்டு ஆ ஒக்கடு அடக்கு என்ற படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தில் ரம்பாவுக்கு மாஸ்டராக பணியாற்றினேன். அப்போது ரம்பா சின்ன பொண்ணு. அவரது அம்மா மற்றும் அண்ணனோடு படப்பிடிப்புக்கு வருவார். அவ்வளவாக யாரோடும் பேசிக் கொள்ளமாட்டார். வருவார். காட்சியை சொன்னால் அதற்கு ஏற்ப நடிப்பார் அவ்வளவுதான்.

    காட்சி இல்லாத நேரத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாலும் மற்றவர்களோடு சகஜமாக பேசக்கூட கூச்சப்படுவார். அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்.

    அதன் பிறகு தமிழில் உழவன், அதன் பிறகு உள்ளத்தை அள்ளித்தா, மின்சார கண்ணா போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் அவருக்கு நான் நடன மாஸ்டராக பணியாற்றிய போது மாஸ்டர் ஜி என்று அவ்வப்போது அழைத்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அவ்வளவுதான்.

    ஆனாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த அளவுக்கு அமைதியாகவே இருக்க கூடியவர். எந்த வம்பு தும்பிலும் சிக்காதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றே சென்று கொண்டிருப்பார்.

    அப்படிப்பட்ட ரம்பாவிடம் மிக நெருங்கிய நட்பு உருவாகும் காலமும் வந்தது. கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சி நடந்த போது குஷ்பு, ரம்பாவை நடுவர்களாக ஏற்பாடு செய்தோம். அந்த நிகழ்ச்சியில் நான், குஷ்பு, ரம்பா மூவரும் ஒன்றாக இருந்தோம். அதனால் எங்களுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

    அந்த நிகழ்ச்சியில் ஒருநாள் கிராமிய பாடல் சுற்று நடந்த போது பாவாடை, தாவணியில் அவர் அச்சு அசலாக தமிழ் பெண் போல் ஆடிய நடனம் எல்லோராலும் பாராட்டப்பெற்றது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. அந்த காஸ்டியூமில் அவர் நடித்ததை பார்த்து நானே சொன்னேன். "இந்த காஸ்டியூமில் உன்னை பார்த்து நிச்சயம் பலர் பெண் கேட்டு வருவார்கள்" என்று. ஏற்கனவே கல்யாண வயதில் இருந்த அவருக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆனால் திருமணம் கைகூடாமல் தள்ளி போய் கொண்டே இருந்தது. நான் இவ்வாறு சொன்னதும், "மாஸ்டர்ஜி உங்கள் வாய் சொல்லாவது பலிக்கட்டும்" என்று அவரும் தமாஷாக சொன்னார்.

    ஆனால் நான் சொன்னது போலவே நடந்தும் விட்டது. அதாவது மானாட மயிலாட நிகழ்ச்சி உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கனடாவில் இருந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்திருக்கிறார்கள். அப்போது பாவாடை, தாவணியில் ரம்பாவை பார்த்ததும் உனக்கு மனைவி அமைந்தால் இப்படி அமைய வேண்டும் என்று அவரது சகோதரிகள் சொல்லி இருந்தார்கள். அதை கேட்டதும் அவருக்கும் ஆசை.

    இந்திரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கனடாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். சென்னையிலும் அவருக்கு தொழில் நிறுவனங்கள் இருந்தது. ரம்பாவை தொலைக்காட்சியில் பார்த்தவர் கண்ணுக்குள் அந்த உருவத்தை நிறுத்தியபடி சென்னைக்கு வந்ததும் விசாரிக்க தொடங்கி இருக்கிறார்.

    ரம்பாவின் சகோதரரிடம் முதலில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதன் பிறகு இரு வீட்டாரும் பேசி திருமணமும் உறுதி செய்யப்பட்டது. எதேச்சையாக நான் சொன்னது பலித்துவிட்டதால் ரம்பாவுக்கு என்னிடம் பிரியம் அதிகமானது.

    மாஸ்டர் நீங்கள் சொன்னது போல் நடந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டார். திருமண நாள் வந்தது. திருப்பதியில் வைத்து திருமணம். நானும் சென்றிருந்தேன். அவரது கணவர் மிக நல்ல மனிதர். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் இல்லத்திற்கு நேரடியாக வந்து நன்றி சொல்லிவிட்டு சென்றார்.

    திருமணம் முடிந்த பிறகு ரம்பா கனடாவில் குடியேறினார். அவர் கனடா சென்ற பிறகும் என்னிடம் தொடர்பிலே இருந்து வந்தார். சென்னைக்கு எப்போது வந்தாலும் என்னை தொடர்பு கொண்டு பேசாமல் செல்லமாட்டார். ஆரம்ப காலத்தில் பேசவே தயங்கியவர். பின்னர் என்னோடு பேசாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாகிவிட்டார்.

    ×