search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விதி மீறல்"

    • போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.51 சதவீதம் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் சென்னை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது.

    சென்னையில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் மொத்தம் 312 சிக்னல்கள் உள்ளன. இதில் 186 சிக்னல்களை ரிமோட் மூலம் இயக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்னலை இயக்கும் போலீசார் சிக்னல் அருகில் எந்த இடத்தில் நின்றபடியும் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கலாம்.

    இந்த சிக்னலை இயக்கும் போலீசாருக்கு வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளதால் அவர்களுக்கு சிக்னல் பகுதியில் விதிமீறலில் ஈடுபடுவோர்மீது வழக்குப் பதிவு செய்யும் பணியும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், விதிமுறைகளை மீறி பதிவு எண் பலகை வைத்திருத்தல், சிக்னல் நிறுத்த கோட்டை மீறுதல், தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட 7 வகையான விதிமுறை மீறலுக்கு அவர்கள் அபராதம் விதிக்கிறார்கள்.

    இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள். இதில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொள்கிறார்கள்.

    அதன்பிறகு உடனடியாக அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்குகிறது. போக்குவரத்து போலீசார் தங்கள் செல்போன்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப் பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

    இந்த புதிய நடைமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை செல்போன் மூலம் படம் எடுத்து எச்சரித்து அனுப்பினார்கள். அதன்பி றகு அவர்கள் மீது வழக்குப்ப திவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 22 நாட்களில் மட்டும் 42 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக பட்சமாக நிறுத்தக் கோட்டை மீறியதாக மட்டும் 17,043 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 13,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிக்னலை மீறியதாக 3511 வழக்குகளும், தவறான திசையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக 7564 வழக்குகளும், விதிமுறையை மீறி பதிவு எண் பலகை வைத்திருந்ததாக 1103 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

    சென்னையில் உள்ள முக்கியமான சிக்னல்களில் ஒன்றரை நிமிடத்தில் இருந்து 2 நிமிடம் வரையும், சாதாரண சிக்னல்களில் அரை நிமிடத்தில் இருந்து ஒரு நிமிடம் வரையிலும் காத்திருப்பு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த காத்திருப்பு நேரத்தில்தான் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி அபராதம் கட்டி வருகிறார்கள். 

    ×