search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் தேர்"

    • மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு அருகில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, பிரசித்தி பெற்ற மத்தூரம்மா என்ற கிராம தேவதை கோவில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திருவிழாவில் அதிக உயரத்தில் மிக பிரம்மாண்டமான தேர் அமைக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது வழக்கம். மேலும் டிராக்டர் மற்றும் எருதுகளை கட்டி தேரை இழுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விழாவில் 25-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டும், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றும் மத்துரம்மாவை வழிபட்டு செல்வார்கள்.

    அந்த வகையில், மத்தூரம்மா கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான 127 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேரில், அம்மனை வைத்து இழுத்துச் சென்ற போது, ஹிலல்லிகே என்ற கிராமத்தில், எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வட்டமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர்.
    • கொங்கண சித்தர் வழிபட்டதாகவும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாராபுரம் சாலையில் வட்டமலை கிராமத்தில் சிறுமலை மீது முத்துக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் சேர மன்னர்களால் கட்டப்பட்டதாகவும், இங்கு கொங்கண சித்தர் வழிபட்டதாகவும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இக்கோவிலில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசியில் சூரசம்ஹார விழாவும், கார்த்திகையில் தீபத்திருவிழாவும், பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்வும் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன் நடைபெற்ற பங்குனி உத்திர தினத்தில் நடந்த தேரோட்டத்தில், முத்துக்குமாரசாமி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வட்டமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த 10 ஆண்டு முன்புவரை தேரோட்டம் நடந்து வந்தது. தற்போது கோவில் திருத்தேர் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் காலம் காலமாக தொன்று தொட்டு நடந்த தேரோட்ட திருவிழாவும் நடத்த முடியாமல் தடைபட்டு நின்று விட்டது. இது பக்தர்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் மேலும் கூறுகையில், வட்டமலை முத்துகுமாரசாமி கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதிக வருமானம் வரும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அது போல பெரும் வருமானம் வரும் கோவில்களிலிருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த இதுபோன்ற கோவில்களின் திருப்பணி, திருத்தேர் புனரமைப்பு மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தினால் கோவில்களில் அன்றாட பூஜைகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தடையின்றி நடக்கும்.

    இந்த கோவில் பழனி முருகன் கோவில் போல மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். எனவே சிதிலமடைந்து காணப்படும் வட்டமலை கோவில் திருத்தேருக்கு பதிலாக புதிய தேரை உடனடியாக நிர்மாணித்து தேரோட்ட திருவிழா நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்த திரைப் படத்தின் சில பாடல் காட்சிகள் இக்கோவிலில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் திருத்தேர் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும், அப்போது தான் அனைத்து கோவில்களிலும் பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தடையின்றி நடக்க வாய்ப்பு உண்டாகும் எனவும் பக்தர்கள் தரப்பில் எழுந்துள்ள நியாயமான கோரிக்கையாக உள்ளது. அதனை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×