search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரிஅனந்தன்"

    • மைலாப்பூர் என்று அழைக்கப்பட்டதை தமிழ் பெயரில் மயிலாப்பூர் என்று அழைக்க வைத்தேன்.
    • மயிலாப்பூர் என்பது மயில்கள் தோகை விரித்து ஆர்ப்பரித்து ஆடும் இடம் ஆகும்.

    சென்னை:

    முதுபெரும் காங்கிரஸ் தலைவர் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நாளை (19-ந்தேதி) தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    இந்த வயதிலும் அவரது தமிழ் தொண்டு நினைவு கூரத்தக்கது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

    1977-ல் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது மொரார்ஜி தேசாய் பிரதமர். அந்த காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே கேள்வி கேட்க முடியும்.

    நான் பாராளுமன்றத்துக்குள் பல நாட்கள் போராடி தமிழிலும் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றேன்.

    ரெயில் நிலையங்களில் 'பயணிகளின் பணிவான கவனத்துக்கு' என்று அறிவித்த வார்த்தை 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு' என்று மாற்ற செய்தேன்.

    மைலாப்பூர் என்று அழைக்கப்பட்டதை தமிழ் பெயரில் மயிலாப்பூர் என்று அழைக்க வைத்தேன். மயிலாப்பூர் என்பது மயில்கள் தோகை விரித்து ஆர்ப்பரித்து ஆடும் இடம் ஆகும்.

    பாண்டி பஜார் என்பதன் உண்மையான பெயர் டபுள்யு.பி.ஏ.சவுந்திர பாண்டியனார் அங்காடி தெரு ஆகும். இதற்காக நான் போராட்டம் நடத்தினேன். கலைஞரும் அதை ஏற்று அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு டபுள்யு.பி.ஏ. சவுந்திர பாண்டியனார் அங்காடி தெரு காவல் நிலையம் என்று பெயர் மாற்றினார்.

    அஞ்சலகம் வழியாக பணம் அனுப்பும் 'மணியார்டர் பார்ம்'-ஐ பணவிடைத்தாள் என்றும் போஸ்ட்கார்டை 'அஞ்சல் அட்டை' என்றும் போஸ்டல் கவரை அஞ்சல் உறை என்றும், தந்தியை 'விரைவு வரைவு' என்றும் மாற்ற வைத்தேன்.

    வரும் தலைமுறையும் இவைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி அனந்தனுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவர், பெருந்தலைவர் காமராசரை தலைவராக ஏற்று அவருடன் இணைந்து பணியாற்றியவர், தமிழ் இலக்கியங்களில் ஆழமான புலமைமிக்க தமிழ் உணர்வாளர் என்ற பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆருயிர் அண்ணன் குமரிஆனந்தன் நாளை 91-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார் என்ற செய்தி எனக்குத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறது!

    பாராளுமன்ற உறுப்பினர், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழ்நாடு பனை மர வாரியத்தின் தலைவர் என பல்துறைகளில் தனித்தன்மையோடு தொண்டாற்றிய பெருமை குமரிஆனந்தனுக்கு உண்டு.

    எளிமையை அணிகலனாகக் கொண்டு பழகுவதில் பண்பாட்டுப் பெருமகனாக-சான்றாண்மை நிரம்பிய தலைவராக, நம்மிடையே வாழ்ந்து வழிகாட்டும், அண்ணன் குமரி ஆனந்தன் நூற்றாண்டு கடந்து தமிழ் போல் வாழ்க! என நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×