search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் தீ பிடித்து எரிந்தது"

    காட்டுமன்னார்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.

    வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.

    இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.

    கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அருவங்காட்டை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் சின்னபிக்கட்டியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கு சொந்தமான காரை ஓட்டிச் சென்றார்.

    கார் ஊட்டி- குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தகுமார் காரை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு உடனடியாக வெளியேறினார்.

    கண்இமைக்கும் நேரத்தில் கார் தீ பிடித்து எரிந்தது. தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிந்தது. கரும்புகை வந்த உடனே நந்தகுமார் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கேத்தி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து காரை நடுரோட்டில் இருந்து அப்புறபடுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இது குறித்து கேத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×