search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் கலெக்டர்"

    • மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை கலெக்டர் சோதிட்டார்.
    • பாதியில் படிப்பை நிறுத்திய 9-ம் வகுப்பு மாணவனிடம் கலெக்டர் குலோத்துங்கன் உருக்கமாக பேசி படிப்பை தொடர வலியுறுத்தியுள்ளார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், தொடர் நடவடிக்கையை கலெக்டர் குலோத்துங்கன் எடுத்து வருகிறார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தேனூரில் அமைந்துள்ள சண்முகம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, பள்ளிவளாகம், வகுப்பறைகள், கழிவறை, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இல்லாத காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருந்ததை அறிந்து,உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கழிவறை அடைப்பை சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.

    மேலும், பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டிட பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்திடுமாறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை சோதிட்டார்.

    அப்போது, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் 100 சதவீத விழுக்காடு பெற்று இப்பள்ளியின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். இப்போது படித்தால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு சென்று நமது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றார்.

    இதை தொடர்ந்து, மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த கலெக்டர், 4 பேர் தொடர் விடுமுறையில் இருப்பதையும், 9-ம் வகுப்பு படித்த மாணவன், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எதிரே உள்ள ஒரு கடையில் பணி செய்வதாக மாணவர்கள் கூறியதை கேட்ட கலெக்டர், உடனடியாக அந்த மாணவனை அழைத்து, அவரிடம் உருக்கமாக பேசி, மீண்டும் பள்ளி படிப்பை தொடரவேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

    மேலும் அங்கு இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம், அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வந்து தன்னை சந்திக்கும்படியும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் கல்வியாண்டில் 100சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும். இடைநிறுத்தல் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும் என்றார்.

    ×