search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்திருஷ்டி"

    • தங்களுக்கு இஷ்டபடியாகவோ அல்லது இடத்திற்கு தகுந்தபடியாகவோ பல்வேறு பெயர்களில் பெயரை சூட்டி விநாயகரை வணங்கி வந்தனர்.
    • விநாயகரை வணங்கினால் கண் திருஷ்டி விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

    அனைவருக்கும் பிடித்த கடவுள் விநாயகர் என்றால் அது மிகையில்லை. வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகையான செல்வங்களும் (பொருட்கள்) பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள் தங்களுக்கு இஷ்டபடியாகவோ அல்லது இடத்திற்கு தகுந்தபடியாகவோ பல்வேறு பெயர்களில் பெயரை சூட்டி விநாயகரை வணங்கி வந்தனர்.

    இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ் பெற்ற விநாயகர்களில் கன்னிமூல உச்சிஷ்ட கணபதி, வ்யாக்ர சக்தி விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர் ஆகிய 4 வகையான விநாயகர் சிறப்பு பெற்றவையாகும்.

    இப்பெயர்கள் வந்ததற்கான காரணம், வணங்கினால் கிடைக்க கூடிய பலன்கள் என்னென்ன என்பது பற்றி மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்கள் சங்கரன் சிவச்சாரியார், சுரேஷ் ஆகியோர் கூறுவதை பார்ப்போம்.

    1. கன்னிமூல உச்சிஷ்ட கணபதி

    இவர் ஆலயங்களில் தென்மேற்கு மூலையில் அமர்ந்து (கன்னிமூலை) பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பூமியில் தாழ்வான மேடான பகுதிகள் உண்டு. ஈசானி மூலை தாழ்வாக இருப்பதால் அதை சமன் செய்யும் வகையில் கன்னிமூலையில் அமர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

    பலன்: இவரை வழிபட்டால் யோகா சம்பந்தப்பட்ட அறிவை மேம்படுத்தும். வியாபாரம், தொழில் அபிவிருத்தியையும், மேலான நல்லெண்ணத்தையும் சக்தியையும் அதிகரிப்பார். எதிர்காலத்தை அறியக்கூடிய ஞானத்தையும் கொடுப்பார்.

    2. வ்யாகர சக்தி விநாயகர்

    இவருடைய உருவம் மற்ற விநாயகரை விட வித்தியாசமானது. கால் பாதத்தில் இருந்து இடுப்பு வரை புலி கால்களையும் இடுப்பு முதல் கழுத்து வரை சக்தி (அம்பாள்) உருவிலும், கழுத்துக்கு மேல் விநாயகர் தலையுடனும் காட்சி அளிப்பார். அசுரர்களை சம்காரம் செய்ய இந்த உருவத்தில் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

    பலன்: பக்தர்களுக்கு மோட்சம் கொடுப்பார். இன்னல்களை தீர்த்து வைப்பார்.

    3. வன்னிமரத்தடி விநாயகர்

    பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது ஆயுதங்களை வன்னிமரத்தடி விநாயகர் பக்கத்தில் மறைத்து வைத்ததாகவும் போர் முடிந்து நாடு திரும்பியபோது களவுபோகாமல் அந்த ஆயுதம் அப்படியே இருந்ததாகவும் அதை விநாயகர் காத்ததாகவும் கூறப்படுகிறது. வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனிதோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

    பலன்: சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.

    4. முக்குருணி விநாயகர்

    மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி ஆகிய 3 சந்திகள் (முக்கு தெருக்கள்) கூடும் இடத்தில் ஊரணி தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அதை மன்னர் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. (முக்கு தெருக்களில் ஊரணி தோண்டும்போது கிடைத்ததால் முக்குருணி விநாயகராக வணங்கப்பட்டார்) 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து விநாயகர் சதுர்த்தியின்போது வழிப்படுவதால் முக்குருணி விநாயகர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    பலன்: இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×