search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அட்டைகள் பறிமுதல்"

    • 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தமிழகத்திலிருந்து தனுஷ் கோடி கடல் வழியாக கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை மண்டபத்தை சேர்ந்த வீரர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    ராமநாதபுரம்:

    மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 39 வகையான கடல் அட்டைகள் காணப்படுகின்றன. நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப்போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கடல் அட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றாங்கரை வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கத்துடன் ஆம்னி காரில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டைகள் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை உதவி உயிரின காப்பாளர் (பயிற்சி) சுரேஷ்குமார் தலைமையில் இன்று காலை பனைக்குளம்-ஆற்றாங்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது பனைக்குளத்தில் இருந்து வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டை மற்றும் 3 பேர் இருந்தனர். இதையடுத்து கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

    கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    • வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, வேதாளை, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டை, தங்கம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    இதை தடுக்க கடலோர காவல்படை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மண்டபம் அருகே உள்ள வலையர்வாடி பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்தப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வலையர்வாடி கடல்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 115 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? அதனை பதுக்கி வைத்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 115 கிலோ கடல் அட்டை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 53 லட்சம் ஆகும்.

    இந்தநிலையில் மண்டபம் அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். உடனே அதில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பினர். தொடர்ந்து போலீசார் சோதனையிட்டபோது 10 கிலோ கடல் அட்டை கடத்தியது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை உள்ளிட்ட அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல அதிகளவில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், நாகையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததும், போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.

    ×