search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயருகிறது"

    • 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
    • இதைத்தொடர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் நடந்தது.

    இதில் கேரளாவை சேர்ந்த 4 நம்பூதிரிகள் கலந்துகொண்டு தேவபிரசன்னம் பார்த்தனர். அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்றும், தேவபிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை கட்டிய ஸ்தபதியின் மகன் ஆனந்த்ஸ்தபதி மற்றும் தொல்லியல் துறையினருக்கும் இந்துசமய அறநிலையத்துறை வடிவமைப்பு பொறியாளர் முத்துசாமி தலைமையிலான வல்லுனர் குழுவினரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடக்க வேண்டி கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்தப்பட்டது. தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது போன்று கோவில் தென்மேற்கு மூலையான கன்னி மூலையில் கோவிலின் தல விருச்சமான சந்தன மரமும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 120 அடி உயரம் 66 அடிநீளம் 40 அடி அகலத்தில் 9 நிலையுடன் ராஜகோபுரம் கட்டுவதற்கான நில அளவீடு செய்யும் பணி நடந்தது. இதேபோல கோவிலின் கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் அமைய இருக்கும் இடத்திலும் நில அளவீடு செய்யும் பணியும் நடந்தது. இந்த நில அளவீடு செய்யும் பணியை இந்துஅறநிலையத்துறை மண்டல ஸ்தபதி செந்தில், ஸ்ரீரங்கம் ஸ்தபதி இளையராஜா ஆகியோர் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இறுதி கட்ட ஆய்வாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியும் மகாபலிபுரம் அரசு சிறப்பு கலைக்கல்லூரியின் முதல்வருமான தட்சணா மூர்த்தி தலைமையிலான வல்லுனர் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் இந்த இறுதி கட்ட ஆய்வு பணிகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அமைய இருக்கும் ராஜகோபுரத்தின் அளவை மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரத்தின் உயரத்தை 120 அடியில் இருந்து 150 அடியாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராஜகோபுரத்தை 9 நிலையில் இருந்து 11 நிலையாக மாற்றவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ராஜகோபுரம் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. இதைத்தொ டர்ந்து இந்த புதிய ராஜகோபுரத்துக்கான மறு அளவீடு செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது.

    ×