search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய விமானப்படை தினம்"

    • இந்த ஆண்டு டிசம்பரில், ஆரம்பப் பயிற்சிக்காக 3,000 அக்னிவீர்களை சேர்க்கவுள்ளோம்.
    • இந்திய விமான படையை பத்தாண்டுக்குள் நூற்றாண்டு நிறைவை கொண்டுவரும் பொறுப்பு இப்போது நம்மிடம் உள்ளது.

    இந்தியாவின் 90-வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சண்டிகாரில் அணி வகுப்பு மற்றும் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று காலை பாரம்பரிய அணிவகுப்பு நடந்தது. இதில் விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி கலந்து கொண்டு அணி வகுப்பை பார்வையிட்டார். விமானப்படை வீரர்களுக்கான புதிய சீருடையையும் அறிமுகம் செய்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    நம் முன்னோடிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் பெற்றுள்ளோம். இந்திய விமான படையை பத்தாண்டுக்குள் நூற்றாண்டு நிறைவை கொண்டுவரும் பொறுப்பு இப்போது நம்மிடம் உள்ளது.

    சுதந்திரத்திற்குப் பிறகு, புதிய செயல்பாட்டுக் கிளை உருவாக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்தக் கிளையை உருவாக்கினால், பறக்கும் பயிற்சிக்கான செலவீனங்கள் குறைந்து ரூ.3,400 கோடிக்கு மேல் சேமிக்கப்படும்.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், இந்திய விமானப்படையில் அதிகாரிகளுக்கான ஆயுத அமைப்புக் கிளையை உருவாக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் பாக்கியமடைகிறேன்.

    அடுத்த ஆண்டு முதல் பெண் அக்னி வீரர்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ​​உள்கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை இணைத்துக்கொள்வது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால் இந்தியாவின் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் சேவையை நோக்கி அதைச் செலுத்துவதற்கும் இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு.

    ஒவ்வொரு அக்னி வீரரும் இந்திய விமானப் படையில் தங்களது தொழிலைத் தொடங்குவதற்கு சரியான திறன் மற்றும் அறிவைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய செயல்பாட்டு பயிற்சி முறையை மாற்றியுள்ளோம். இந்த ஆண்டு டிசம்பரில், ஆரம்பப் பயிற்சிக்காக 3,000 அக்னிவீர்களை சேர்க்கவுள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானப்படையில் உருவாக்கப்படும் ஆயுத அமைப்பு கிளை, நவீன ஆயுதங்களை கையாளும் புதிய படைப்பிரிவு ஆகும். டிரோன்கள், வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை புதிய படைப்பிரிவு கையாளும்.

    பிற்பகலில் சண்டிகாரின் சுக்னா ஏரிப்பகுதியில் விமானப்படையினரின் சாகசங்கள் நடக்கிறது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி பார்வையிடுகிறார்கள். சாகசத்தில் 80 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுகின்றன.

    ×