search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த நாகேஸ்வரன்"

    • உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது.
    • இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது.

    சென்னை :

    சென்னை எழும்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்.ஐ.சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தொழிலதிபர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

    2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் உயர வாய்ப்புள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நிலை 9.1 சதவீதமாக இருந்தது.

    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மற்ற நாடுகள்போல நமது நாடும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்றால், அந்த நிலையை சமாளிக்க அரசின் செலவையோ, மத்திய வங்கியின் வட்டி விகிதத்தையோ, பணப் புழக்கத்தையோ கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கவில்லை.

    முன்னெச்சரிக்கையுடன், எந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் உதவிகளை அளிப்பதற்காக இலக்கை நிர்ணயித்து, நிதானத்துடன் செயல்பட்டோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு, அரசின் நிதிநிலை ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இந்த ஆரோக்கியமான நிலைதான் வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாக இருக்கும்.

    இந்தியாவில் உள்ள வங்கிகள், பெரு நிறுவனங்கள் போன்றவை 2011-2020-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மிக அதிகமாக முதலீடு செய்தன. வங்கிகள் அதிகமாக கடன்களை வழங்கின. இதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க கடந்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் கடன் நிலவரமும் முன்பு இருந்ததைவிட குறைந்துள்ளது.

    எனவே அவர்கள் மேற்கொண்டு கடன்களை வாங்கி முதலீடு செய்யும் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டுள்ளது. இனி வரும் 10 ஆண்டுகளில் வங்கிகளின் கடன் அளிக்கும் மனப்பான்மையும், பெரு நிறுவனங்கள் கடன் பெறும் நிலையும் சாதகமாக அமைந்து, எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.

    அடுத்ததாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், மென்பொருள் முதலீடுகளில் சிறிய தொழில் நிறுவனங்கள் கூட உலகளாவிய சந்தையில் பங்கேற்க முடியும் என்பதுதான். இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு ஏதுவாக அமைகிறது.

    எந்தவொரு நிறுவனமும் அயல் நாடுகளுக்கு சென்றுதான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது. எனவே இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு 0.5 சதவீதம் பங்களிக்க வாய்ப்புள்ளது

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் சீர்திருத்தங்கள், கொரோனா காலகட்டத்தில் செய்த மிதமான செலவுகள், மத்திய வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள், பெரு நிறுவனங்களின் நிதி நிலைமை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவிகரமாக இருக்கும்.

    இதனால் இனிவரும் 8 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6.5 சதவீதம் வளர வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அளவில் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால் இந்த 6.5 சதவீதம் என்பது 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×