search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Economic Advisor"

    • உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது.
    • இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது.

    சென்னை :

    சென்னை எழும்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்.ஐ.சி.சி.ஐ. அமைப்பு சார்பில் தொழிலதிபர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் ஆற்றிய முக்கிய உரை வருமாறு:-

    2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் உயர வாய்ப்புள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நிலை 9.1 சதவீதமாக இருந்தது.

    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மற்ற நாடுகள்போல நமது நாடும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்றால், அந்த நிலையை சமாளிக்க அரசின் செலவையோ, மத்திய வங்கியின் வட்டி விகிதத்தையோ, பணப் புழக்கத்தையோ கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கவில்லை.

    முன்னெச்சரிக்கையுடன், எந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் உதவிகளை அளிப்பதற்காக இலக்கை நிர்ணயித்து, நிதானத்துடன் செயல்பட்டோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு, அரசின் நிதிநிலை ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இந்த ஆரோக்கியமான நிலைதான் வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாக இருக்கும்.

    இந்தியாவில் உள்ள வங்கிகள், பெரு நிறுவனங்கள் போன்றவை 2011-2020-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மிக அதிகமாக முதலீடு செய்தன. வங்கிகள் அதிகமாக கடன்களை வழங்கின. இதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க கடந்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களின் கடன் நிலவரமும் முன்பு இருந்ததைவிட குறைந்துள்ளது.

    எனவே அவர்கள் மேற்கொண்டு கடன்களை வாங்கி முதலீடு செய்யும் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டுள்ளது. இனி வரும் 10 ஆண்டுகளில் வங்கிகளின் கடன் அளிக்கும் மனப்பான்மையும், பெரு நிறுவனங்கள் கடன் பெறும் நிலையும் சாதகமாக அமைந்து, எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும்.

    அடுத்ததாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய மற்றொரு அம்சம் என்னவென்றால், மென்பொருள் முதலீடுகளில் சிறிய தொழில் நிறுவனங்கள் கூட உலகளாவிய சந்தையில் பங்கேற்க முடியும் என்பதுதான். இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு ஏதுவாக அமைகிறது.

    எந்தவொரு நிறுவனமும் அயல் நாடுகளுக்கு சென்றுதான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. உலக சந்தைகளில் பங்கேற்பதற்கு டிஜிட்டல் தளம் உதவிகரமாக உள்ளது. எனவே இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நமது நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு 0.5 சதவீதம் பங்களிக்க வாய்ப்புள்ளது

    இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் சீர்திருத்தங்கள், கொரோனா காலகட்டத்தில் செய்த மிதமான செலவுகள், மத்திய வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள், பெரு நிறுவனங்களின் நிதி நிலைமை, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவிகரமாக இருக்கும்.

    இதனால் இனிவரும் 8 ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 6.5 சதவீதம் வளர வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அளவில் மேலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டால் இந்த 6.5 சதவீதம் என்பது 7.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த பதவியை மூன்று ஆண்டு காலம் வகிப்பார்.

    நிதித்துறையில் இந்த பொறுப்பை நிர்வகித்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் விலகியதை தொடர்ந்து தற்போது கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இந்த பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ChiefEconomicAdviser #KrishnamurthySubramanian
    மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா செய்தது குறித்து ராகுல்காந்தி கேப்டன் (மோடி) வேகமாக தூங்குகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். #ArvindSubramanianResigns
    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது59). கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் அதே பதவியில் சிறிது காலம் தொடருமாறு அரசு கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் பதவி காலம் முடிய 4 மாதம் உள்ள நிலையில் அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.


    இந்த தகவலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் பதவி விலக விரும்புவதாக அரவிந்த் சுப்பிரமணியன் தன்னிடம் தெரிவித்ததாக ஜெட்லி தெரிவித்தார்.

    அரவிந்த் சுப்பிரமணியனின் குடும்ப சூழல் கருதி அவரது ராஜினாமாவை ஏற்றதாக ஜெட்லி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-


    நிதி மந்திரி (முன்னாள்?) பூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு பேஸ்புக் மூலம் முக்கிய செய்திகளை வெளியிடுகிறார். இந்தியா பொருளாதாரத்தின் சாவி பா.ஜனதா பொருளாளரிடம் இருக்கிறது.

    பா.ஜனதா அரசு மூழ்கும் கப்பல் என்பதால் அதில் இருந்து திறமையானவர்கள் விலகி செல்கிறார்கள். கண்ணுக்கு புலப்படாத கையால் ஆர்.எஸ்.எஸ். தன் வசப்படுத்த பார்க்கிறது.

    அதே நேரத்தில் கேப்டன் டிமோ (மோடி) வேகமாக தூங்குகிறார். இது பைத்திய காரதனமாக உள்ளது.

    இவ்வாறு ராகுல்காந்தி மோடி அரசை தாக்கியுள்ளார். #ArvindSubramanianResigns #RahulGandhi
    தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArvindSubramanian #Resign
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது 59). இவர் 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இந்தப் பதவி 3 ஆண்டு காலத்துக்கானது. ஆனால் 3 ஆண்டு முடிந்த பின்னரும், அந்தப் பதவியில் தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்து உள்ளார்.

    அரவிந்த் சுப்பிரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “3 ஆண்டுகள் முடிந்த உடன், அவர் இன்னும் கொஞ்ச காலம் தொடருமாறு கேட்டுக்கொண்டேன். அந்த நேரத்தில்கூட அவர் குடும்ப பொறுப்புக்கும், தற்போதைய பணிக்கும் இடையே அல்லாடுவதாக தெரிவித்தார். இருப்பினும் பணியை அவர் மேலானதாக கருதினார். தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அவர் வேறு வழியின்றி இப்போது என்னை விட்டு விலகி உள்ளார்” என கூறி உள்ளார்.

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தன்னைப்பற்றி கூறி உள்ள கனிவான வார்த்தைகளுக்காக அரவிந்த் சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் ஆராய்ச்சிப்பணிக்காகவும், எழுத்துப்பணிக்காகவும் அமெரிக்கா செல்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #ArvindSubramanian #Resign #tamilnews
    ×