தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArvindSubramanian #Resign
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா
Published on

புதுடெல்லி:

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன் (வயது 59). இவர் 2014-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இந்தப் பதவி 3 ஆண்டு காலத்துக்கானது. ஆனால் 3 ஆண்டு முடிந்த பின்னரும், அந்தப் பதவியில் தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் திடீரென அந்தப் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘பேஸ்புக்’ பதிவில் தெரிவித்து உள்ளார்.

அரவிந்த் சுப்பிரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “3 ஆண்டுகள் முடிந்த உடன், அவர் இன்னும் கொஞ்ச காலம் தொடருமாறு கேட்டுக்கொண்டேன். அந்த நேரத்தில்கூட அவர் குடும்ப பொறுப்புக்கும், தற்போதைய பணிக்கும் இடையே அல்லாடுவதாக தெரிவித்தார். இருப்பினும் பணியை அவர் மேலானதாக கருதினார். தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அவர் வேறு வழியின்றி இப்போது என்னை விட்டு விலகி உள்ளார்” என கூறி உள்ளார்.

மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தன்னைப்பற்றி கூறி உள்ள கனிவான வார்த்தைகளுக்காக அரவிந்த் சுப்பிரமணியன் நன்றி தெரிவித்துக்கொண்டு உள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் ஆராய்ச்சிப்பணிக்காகவும், எழுத்துப்பணிக்காகவும் அமெரிக்கா செல்வதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #ArvindSubramanian #Resign #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com