search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணைகள் நீர்மட்டம்"

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. #Rain #Dams
    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும், மாலையில் மழையுமாக காலநிலை மாறி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம் கருமேகங்கள் சூழ்ந்து மாலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை பகுதியில் 37.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய மழை காரணமாகவும் கூடுதல் தண்ணீர் வந்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.95 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,835 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.18 அடியாக இருந்தது.

    இங்கு பெய்த மழையினால் இந்த அணை மேலும் 3 அடி உயர்ந்து 133.27 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 100 அடியை தாண்டிய மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 101.05 அடியாக உள்ளது.

    பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய 3 அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் அணைகள் நிரம்பி வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான கடனா, ராமநதி, கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் 76.80 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 69.25 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 63.23 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 31.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 98.50 அடியாகவும் உள்ளன.

    நம்பியாறு, குண்டாறு அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. எனினும் சீசன் முடிந்து விட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

    ஐயப்ப பக்தர்கள், குறைவான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையினால் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 500 குளங்களுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதில் பல குளங்கள் நிரம்பியுள்ளன.

    அணை பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை-37.60, பாபநாசம் -24, ராமநதி-20, மணிமுத்தாறு-19.20, சேர்வலாறு-15, கொடுமுடியாறு-15, அடவிநயினார் அணை-11, குண்டாறு-9, சேரன்மகாதேவி-8, செங்கோட்டை-7, நெல்லை-5, கருப்பாநதி-4, ஆய்க்குடி-2.60, நாங்குநேரி-2. #Rain #Dams

    ×