search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்லெடிகோ டி கொல்கத்தா"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.

    விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.



    பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC #ATK 
    ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இதில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், பெங்களூரு எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி, ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி எப்.சி., டெல்லி டைனமொஸ், நார்த்ஈஸ்ட் யுனைடெட் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் போட்டி நடைபெறும். இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 18 ஆட்டங்களில் விளையாடும். அதன்படி மொத்த லீக் ஆட்டங்கள் 90 ஆகும்.

    லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவில் 10 நகரங்களில் போட்டி நடக்கிறது.


    கொல்கத்தாவில் நாளை நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியான அட்லெடிகோ டி கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தற்போது டிசம்பர் 16-ந்தேதி வரை லீக் ஆட்டங்களான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 2½ மாதம் காலம் 59 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் சர்வதேச போட்டி காரணமாக 3 முறை சிறிது இடைவெளி விடப்பட்டு போட்டிகள் நடக்கிறது.

    மீதமுள்ள லீக் ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி, தேதி, இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படுகிறது.

    சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள சென்னையின் எப்.சி. அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் இறங்குகிறது.


    மலேசியாவில் முதல்கட்ட பயிற்சி முகாமை முடிந்து சென்னையின் எப்.சி. பின்னர் கோவாவில் பயிற்சியை முடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் வருகிற 30-ந்தேதி பெங்களூரு எப்.சி.யுடன் மோதுகிறது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரிகோரி பயிற்சியாளராக உள்ளார். அவர் கூறும்போது, இந்த முறையும் கோப்பையை வசப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    சென்னையின் எப்.சி. அணியில் இந்தியாவைச் சேர்ந்த ஜெ.ஜெ. லால் பெகுக்லா, முகமது ரபி, தனபால் கணேஷ், ஜெர்மன் பிரீத்சிங், அனிருத் தபா மற்றும் பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொல்கத்தா (2014, 2016), சென்னை (2015, 2017) தலா 2 முறை கைப்பற்றி உள்ளன.  #ISL2018 #ATKvKBFC
    ×