search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will not attend"

    கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

    பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



    கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

    பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×