search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villupuram sand smuggling"

    விழுப்புரம் மாவட்டம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மணல் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி தாசில்தார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள புதுகருவாச்சி பகுதியில் உள்ள ஏரியில் மணல் கொள்ளை நடைபெறுவதாக விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சுந்தர ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்ம மனிதர்கள் 3 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் ஏற்றி கொண்டிருந்தனர்.

    உடனே அந்த மர்ம மனிதர்கள் 3 பேரையும் பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அதில் அவர்கள் புதுகருவாச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50), பழைய கருவாச்சி பகுதியை சேர்ந்த சங்கர் (36), கணேசன் (47) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் தேவியாநந்தல் பகுதிக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜேந்திரன், சங்கர், கணேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிளியனூரில் மணல் கடத்திய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் துணைபோலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் வழியாக மணல் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் கிளியனூர் அருகே உள்ள காட்ராம்பாக்கம் என்ற இடத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மோட்டார்சைக்கிளில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டார். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுவை மணலிப்பட்டு பகுதியை சேர்ந்த மூர்த்தி(வயது 31) என்பதும் இவர் மணல் கடத்தி வந்த லாரியின் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்து கிளியனூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பிஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×