search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikas Bahl"

    பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், நடிகை கங்கனாவும் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். #Kangana
    தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டினார்.

    இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

    இந்த நிலையில், நேற்று நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனுஸ்ரீ தத்தாவை தொடர்ந்து, இயக்குநர் ஒருவர் மீது நடிகை கங்கனா ரணாவத் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார்.



    கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த குயின் படத்தில் நடித்தபொழுது அதன் இயக்குநரான விகாஸ் பாஹல் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கங்கனா தெரிவித்துள்ளார்.

    கடந்த 2015ம் ஆண்டு பாம்பே வெல்வெட் என்ற திரைப்படத்தின் விளம்பர சுற்றுலாவுக்காக சென்றபொழுது தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என இயக்குநர் விகாஸ் மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு எழுப்பினார்.

    எனினும் இந்த விவகாரம் 2 வருடங்களுக்கு முன் முக்கியத்துவம் பெறாமல் தவறி விட்டது. ஆனால், நானா படேகர் விவகாரம் எழுந்துள்ள நிலையில், அந்த பெண் மீண்டும் விகாஸ் விவகாரத்தினை நேற்று எழுப்பினார்.

    இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக நடிகை கங்கனா ரணாவத் பேசியுள்ளார். விகாஸ் தன்னிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும்பொழுது, அந்த பெண்ணை முழுவதும் நான் நம்புகிறேன். கடந்த 2014ம் ஆண்டு விகாசுக்கு திருமணம் நடந்திருந்தபொழுதும், குயின் படப்பிடிப்பு நடந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நபருடன் பாலியல் உறவில் ஈடுபடுவார்.

    ஒவ்வொரு இரவும் விருந்து நடக்கும். நான் படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுக்க செல்வேன். ஆனால் என்னை தூங்க விடாமல் அவர் கேவலப்படுத்தினார்.

    இந்த படப்பிடிப்பில் ஒவ்வொரு முறை விகாசை நான் சந்திக்கும்பொழுது, வழக்கம் போலான வரவேற்பில் இருவரும் கட்டி கொள்வோம். அவர் எனது கழுத்தில் அவரது முகத்தினை புதைத்து கொள்வார். என்னை இறுக கட்டி கொள்வார். பின்னர் எனது முடியை முகர்ந்திடுவார்.



    அவரிடம் இருந்து என்னை விடுவித்து கொள்ள அதிக வலிமையுடன் நான் போராட வேண்டியிருந்தது. அதன்பின் விகாஸ் என்னிடம், நீ எப்படி வாசமுடன் இருக்கிறாய் என்பதனை நான் நேசிக்கிறேன் என கூறுவார். அவரிடம் ஏதோ தவறு உள்ளது என என்னால் கூற முடியும் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

    விகாஸ் பாஹல், பாந்தம் பிலிம்சின் 4 உரிமையாளர்களில் ஒருவர். விகாஸ் மீது பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கூறிய நிலையில், பாந்தம் பிலிம்ஸ் கலைக்கப்படுகிறது என்றும் 4 பேரும் தனி தனியாக செயல்பட உள்ளோம் என்றும் நேற்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விகாசின் இயக்கத்தில் சூப்பர் 30 படமும், கங்கனாவின் மணிகர்னிகா தி குயின் ஆப் ஜான்சி படமும் அடுத்த வருடம் ஜனவரி 25ந்தேதி ஒரே நாளில் திரையிடப்பட உள்ளது.
    ×