search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vettakkorumakan Temple"

    சிவபெருமானுக்கு, கேரளாவின் வடக்குப் பகுதியில் நிறைய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்கள் மலையாள மொழியில் வேட்டக்கொரு மகன் (வேட்டைக்கொரு மகன்) கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    கருமையான நிறத்தில் இரு கைகளிலும் வில்லம்புகளுடன் கிராதன் (வேடுவன்) உருவத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு, கேரளாவின் வடக்குப் பகுதியில் நிறைய கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்கள் மலையாள மொழியில் வேட்டக்கொரு மகன் (வேட்டைக்கொரு மகன்) கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    வேடுவமூர்த்தி :

    சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தைப் பெற விரும்பிய அர்ச்சுனன், அடர்ந்த காட்டுக்குள் சிவபெருமானை நினைத்து கடுமையான தவம் இயற்றினான். அவனது தவத்தைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பிய சிவபெருமான் வேடுவனாகவும், பார்வதிதேவி வேடுவப் பெண்ணாகவும் உருவ மாற்றம் கொண்டு அங்கு வந்தனர்.

    அப்போது, அர்ச்சுனனின் தவத்தைக் கலைத்து, அவனைக் கொல்லும் நோக்கத்தில் மூகன் எனும் அரக்கன் பன்றி உருவமெடுத்து அங்கு வந்தான். அதனையறிந்த அர்ச்சுனன் அந்தப் பன்றியைக் கொல்வதற்காக அம்பு எய்தான். அதே வேளையில், அங்கு வேடுவனாக வந்த சிவபெருமானும் அந்தப் பன்றியைக் கொல்ல அம்பு எய்தார். இரு அம்புகளும் பாய்ந்த நிலையில் அந்தப் பன்றி இறந்து விழுந்தது.

    இந்நிலையில், அந்தப் பன்றியை யாருடைய அம்பு முதலில் குத்திக் கொன்றது என்பதில் அர்ச்சுனனுக்கும் வேடுவனாக இருந்த ஈசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அர்ச்சுனன் வேடுவனை நோக்கித் தன் அம்பைச் செலுத்தினான். வேடுவன் அந்த அம்பைத் தனது அம்பால் எளிதில் வீழ்த்தினான். இப்படியே, அர்ச்சுனனிடம் இருந்து வந்த அம்புகள் அனைத்தும் வேடுவனால் வீழ்த்தப்பட்டன.

    தன்னிடம் அம்புகள் எதுவுமில்லாமல் போனதால் கவலையடைந்த அர்ச்சுனன், அங்கிருந்த மலர்களை எடுத்துச் சிவலிங்கத்தின் மேல் தூவி, வேடுவனை எதிர்க்கத் தேவையான ஆயுதத்தை வழங்கிட வேண்டினான். அப்போது, அவன் சிவலிங்கத்தின் மேல் தூவிய மலர்கள் அனைத்தும் வேடுவனின் காலடியில் சென்று விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.

    அதன் பிறகுதான் அவனுக்கு வேடுவன் உருவத்தில் இருப்பது இறைவன் சிவபெருமான் என்பது தெரிந்தது. உடனே அவன், இறைவன் என அறியாமல் எதிர்த்துச் சண்டையிட்டதற்காக வருந்தி மன்னிப்பு வேண்டினான். அவனை மன்னித்த இறைவன், அவன் விரும்பிய பாசுபத அஸ்திரத்தை வழங்கினார்.

    அர்ச்சுனனுக்கு இறைவன் வேடுவன் உருவில் காட்சியளித்த தோற்றமே கிராதன் (வேடுவன்) தோற்றம் என்றும், இவ்வடிவில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி) என்றும், பாசுபதமூர்த்தி என்றும் சொல்லி வழிபடுகின்றனர் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.

    வேட்டைக்கொரு மகன் :

    கேரளாவில் வேடுவன் உருவத்தில் இருக்கும் இறைவனைக் கிராதமூர்த்தி (வேடுவமூர்த்தி), பாசுபதமூர்த்தி என்ற பெயர்களில் அல்லாமல், ‘வேட்டக்கொருமகன்’ (வேட்டைக்கொரு மகன்) என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். அதற்குக் காரணமாக, அங்கு முந்தைய புராணக்கதையின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    அர்ச்சுனனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கிய சிவபெருமானும், பார்வதிதேவியும் அந்தக்காட்டில் வேடுவர்களாகத் தொடர்ந்து சில காலம் இருந்தனர். அப்போது அவர்களுக்குப் பிறந்த ஒரு ஆண் குழந்தையை அந்தக் காட்டிலேயே விட்டுச் சென்றுவிட்டனர். வேடர்களின் தலைவன் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான்.

    வேடர்களின் தலைவன் பராமரிப்பில் வளர்ந்த அந்தக் குழந்தை சிறுவனாக இருந்த போதே, அம்பு எய்தல், எதிரிகளை வீழ்த்துதல் என்று பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டது. அதோடு மட்டுமில்லாமல் குறும்புகளையும் அதிகமாகச் செய்யத் தொடங்கியது.

    அவன் செய்த குறும்புகளால் அந்தக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த முனிவர்கள் தவமியற்ற முடியாமல் தவித்தனர். அவனது தொல்லைகளால் பெரும் பாதிப்படைந்தனர். அதனால் கவலையடைந்த முனிவர்கள், அந்தச் சிறுவனால் ஏற்படும் தொல்லைகளைப் பற்றிப் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட பிரம்மா, சிவபெருமானிடம் சென்று தெரிவிக்கும்படிச் சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.

    முனிவர்கள் அனைவரும் சிவபெருமானைச் சென்று பார்த்தனர். அவர், சிறுவன் விளையாட்டாகச் செய்வதைப் பெரிதுபடுத்த வேண்டாம். அவன் பெரியவனாக வளர்ந்ததும் சரியாகிவிடுவான் என்று சொன்னார். அவர்களுக்கும் சிவபெருமான் சொல்வது சரிஎன்று தோன்றியதால், அங்கிருந்து மீண்டும் அந்தக் காட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர்.

    அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனான பின்பும் தனது குறும்புகளை நிறுத்திக் கொள்ளவில்லை, அங்கிருந்த முனிவர்கள், அவர்களைத் தேடி வருபவர்கள் என்று அனைவருக்கும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். அவனுடையத் தொல்லைகளைப் பொறுக்க முடியாத முனிவர்கள், இம்முறை விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அதனைக் கேட்ட விஷ்ணு, அவனுடைய தொல்லை இனி இருக்காது என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.



    அதன் பிறகு விஷ்ணு, அவனுக்கு முன்பாக அந்தணர் உருவில் தோன்றித் தன்னிடமிருந்த தங்கத்திலான உடைவாள் ஒன்றைக் காட்டினார். அதன் அழகிய வேலைப்பாடுகளில் மயங்கிய அவன் விஷ்ணுவிடம், தனக்கு அந்த உடைவாளைத் தரும்படி கேட்டான். உடனே விஷ்ணு, ‘உடைவாளை எப்போதும் வலது கையிலும், வில் அம்பை இடது கையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி வழங்கினார்.

    அதனைப் பெற்றுக் கொண்ட அவன், அந்த உடைவாளை வலது கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இடது கையில் இருக்கும் வில், அம்பைப் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால், அவன் செய்து வந்த குறும்புகள் அனைத்தும் குறைந்து போனது மட்டுமின்றி, அவனால் பிறருக்கு ஏற்பட்டு வந்த தொல்லைகளும் இல்லாமல் போனது.

    இந்நிலையில் அவன் முன்பு தோன்றிய சிவபெருமான், அவனைத் தென்பகுதிக்குச் சென்று, அவனை ஏற்குமிடத்தில் காவல் தெய்வமாக இருக்கும்படி அனுப்பி வைத்தார். அங்கிருந்து கிளம்பிய அவன், பல்வேறு பகுதிகளைக் கடந்து கேரள மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்தவர்கள் அவனுக்கு வரவேற்பளித்தது மட்டுமின்றி, அவனைத் தங்கள் காக்கும் கடவுளாக இருக்கவும் வேண்டினர். அவனும் அதற்குச் சம்மதித்தான். அவர்கள் அவனுக்கு அங்கு கோவில் அமைத்து ‘வேட்டக்கொருமகன்’ எனும் பெயரில் வழிபடத் தொடங்கினர்.

    வழிபாடு :

    வேட்டக்கொருமகன் கோவில்களிலும் பிற கோவில்களைப் போன்றே வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பகவதி கோவில்களில் நடத்தப்பெறும் ‘களமெழுத்துப் பாட்டு’ போன்று இக்கோவிலிலும் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது தேங்காய் எறிச்சல், வெளிச்சப்பாடு துள்ளல் போன்றவை நடத்தப்பெறுகின்றன.

    ஐயப்பனின் மண்டல பூஜை காலத்தினையொட்டி வேட்டக்கொருமகன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நாற்பத்தி ஒன்றாம் நாளில் வேட்டக்கொருமகன் உருவம் தரையில் சித்திரமாக வரையப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூஜை செய்யப்படுகிறது. சில கோவில்களில் இவ்வுருவம் இருபது அடி நீளம், பன்னிரண்டு அடி அகலம் வரை வரையப்பட்டு வழிபாடு நடைபெறும். பின்பு களமெழுதிய வேட்டைக்கொருமகன் சித்திரம் அழிக்கப்பட்டு, அந்த வண்ணக்கலவைப் பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    பந்தீராயிரம் விழா :


    இந்தக் களமெழுத்துப் பூஜையின் போது இங்குள்ள இறைவனை மகிழ்விக்கச் செய்யும் சடங்காக ‘வேட்டக்கொருமகன் பாட்டு’ இடம் பெறுகிறது. இப்பாட்டு ஒலிக்கும் போது தேங்காய் எறிச்சல் நடத்தப் பெறுகிறது. அதாவது, இப்பாட்டு ஒலிக்கும் வேளையில் பன்னிரண்டாயிரம் தேங்காய்கள் பாட்டு ஒலிப்பிற்கேற்ப உடைக்கப்படுகிறது.

    கேரள மக்களிடையே இந்த வேட்டக்கொருமகனை வணங்கினால், பயம் அகன்று, நல்ல தெளிவு பிறக்கும் என்றும், திருமணப்பேறு, குழந்தைப்பேறு கிடைக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    ஆலயம் அமைந்த இடங்கள் :

    வேட்டைக்கென்றே பிறந்த ஒரு மகன் என்று பொருள் கொள்ளக்கூடிய வேட்டக்கொருமகன் கோவில், பாலுசேரி எனுமிடத்தில் தான் முதன்முதலாக அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே மற்ற ஊர்களில் இக்கோவில்கள் அமைக்கப்பட்டதாக சொல்கின்றனர். கேரளாவின் வடக்குப் பகுதியில் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான வேட்டக்கொருமகன் கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் பாலுசேரி, நீலாம்பூர், காயங்குளம் கிருஷ்ணாபுரம், எருவட்டிக்காவு, ஆலப்படம்பா, நீலேஸ்வரம், கோட்டக்கல், கோழா, ஒலசா படிஞ்சாரேப்பட்டு போன்ற இடங்களில் அமைந்திருக்கும் கோவில்கள் இவற்றில் சிறப்பு பெற்றதாக இருக்கின்றன.

    வேட்டக்கொரு மகன் உருவம் :

    பெ்ரும்பான்மையான கோவில்களில் இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மீசையுடன் வேடன் உருவில், வலது தோளின் பின்புறம் அம்புறாத்தூணி, வலக்கையில் உடைவாள், இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்த நிலையில் காட்சி தரும் வேட்டைக்கொரு மகன் படங்களே வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சில கோவில்களில் மட்டும் மேற்காணும் உருவிலான சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவருடைய உருவம் ஐயப்பன் உருவத்தைப் போன்றிருப்பதால், இவரை ஐயப்பனின் மறு தோற்றம் என்றும் சொல்வதுண்டு.

    கிராத மூர்த்தி :


    சிவபெருமானின் அறுபத்து நான்கு சிவ வடிவங்களில் ஒன்றாகவும், இருபத்தைந்து சிவமூர்த்தங்களில் ஒன்றாகவும் இருப்பது கிராதன் (வேட்டுவன்) உருவமாகும். சில சிவாலயங்களின் கோபுரங்களிலும், தூண்களிலும் சிவபெருமானை வேடுவனாகவும், அர்ச்சுனனைத் தவம் செய்யும் கோலத்திலும் சுதை மற்றும் வண்ணச் சிற்பங்களாக வடிவமைத்திருப்பதைக் காணலாம்.

    தமிழ்நாட்டில் கும்பகோணம் தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கிராத கோலத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுதக்கும்பம் ஒரு மேடான இடத்தில் தங்கிய போது, சிவபெருமான் வேடுவக் கோலத்தில் வந்து, ஓர் அம்பால் அந்த அமுதக் கலசத்தை உடைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. 
    ×