search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedassandur"

    வேடசந்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய பெண் உடல் கருகி பலியானார்.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர், போலீஸ்காரராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். மோகன்ராஜ் சுக்காம்பட்டியில் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் சுக்காம்பட்டியில் தங்கியுள்ளனர். இவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பொன்னுத்தாய் (வயது 52) என்பவரும் ஒருவர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தனது செல்போனை தொழிற்சாலையிலேயே மறந்து வைத்துவிட்டு சென்று விட்டார். அதை எடுப்பதற்காக பொன்னுத்தாய் நேற்று ஆலைக்கு வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலைக்கு வேறுயாரும் வேலைக்கு வரவில்லை.

    பொன்னுத்தாய், தான் வேலை பார்த்த இடத்துக்கு சென்று அறைக்கதவை திறந்த போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததுடன், சிறிது நேரத்தில் கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. இதில் சிக்கிக்கொண்ட பொன்னுத்தாய், சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    வெடிவிபத்தை பார்த்து அக்கம் பக்கத்தினர் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×