search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triple Goddess"

    • மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி.
    • சரஸ்வதி தேவிக்கு கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது.

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை போலவே, மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று, நவராத்திரி. இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி அப்பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும், வட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் இங்கே இருக்காது என்றாலும், தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் பார்வதி (துர்க்கை) வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் முறையாக நடத்தப்படும்.

    துர்கா தேவி

    நெருப்பின் ஒளி பொருளிய அழகும், ஆவேசப்பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாகத் திகழும் தெய்வம் இவர். இச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை, 'கொற்றவை', 'காளி' என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவ பிரியை ஆவார். இந்த அன்னை, மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டாள். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

    10-வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நாளை நாம் 'விஜயதசமி' என்று வழிபடுகிறோம். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை. தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள். இவர்களை "நவ துர்க்கை' என்று அழைப்பார்கள்.

    லட்சுமி தேவி

    செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவி. மலரின் அழகும், அருள் பார்வையும் கொண்டு அருள்பாலிப்பவர், கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர். விஷ்ணு பிரியையான இந்த தேவி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக வெளிப்பட்டவள். இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.

    இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து. வறுமையை அகற்றும் சக்தி பெற்றவள். லட்சுமி தேவியின் அம்சமான ஆதி லட்சுமி, மகாலட்சுபி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் "அஷ்ட லட்சுமிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

    சரஸ்வதி தேவி

    கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி, அமைதியான பார்வையும், வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர். ஞான சக்தியாக அருளும் இந்த தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது. பிரம்ம பிரியையான இந்த தேவியை, நவராத்திரி விழாவின் போது, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.

    நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை, 'சரஸ்வதி பூஜை' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்த ரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் "அஷ்ட சரஸ்வதிகள்" என்று போற்றப்படுகின்றனர்.

    ×