search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist Minister"

    • அமைச்சர் ராமச்சந்திரன்-சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்
    • உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேலாண்மை இயக்குநர், சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால், உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். மேலும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாத்துறை சாகச விளையாட்டுகளுக்கு விதிமுறைகளை கண்டறிந்து கடந்த செப்டம்பர் மாதம் நெறிமுறைப்படுத்தி விதி முறைகளை வெளியிட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா தல மேம்பாட்டு புதிய திட்டத்தினை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 அல்லது 15 இடங்களை தேர்வு செய்து அரசின் நிதி பெற்று பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும். சில இடங்களில் தனியாருடன் இணைந்து பல்வேறு சாகச விளையாட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் ஊட்டி படகு இல்லம், கொல்லிமலை, ஜவ்வாதுமலை; ஏலகிரி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாகச விளையாட்டுகள் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கிளேம்பிங் சைட் அமைக்கபட உள்ளது.

    இதில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு, விதானப் பயணம், இழைவரி சுழற்சி, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர் இழைவரிக் கோடு, பங்கீ ஜம்பிங், ராக்கெட் வெளியேற்றி, தொங்கு பாலம், மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட மனித கைரோ, ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகும். இப்பணிகள் முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். ஏற்கனவே இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்கள் பதிவு செய்து இது மட்டுமின்றி வேறு நிகழ்ச்சிகள் செய்பவர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் இது போன்று நிகழ்ச்சிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறையில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்படும்.

    சுற்றுலாத்துறையின் மூலம் மிதக்கும் உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×