search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thevar Jayanti"

    • பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடங்களில் உள்ள தேவர் சிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, கீரைத்துறை பாண்டியன், அன்ன முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலா இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.


    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


    பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×