search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tattoos"

    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும்.
    ‘டாட்டூ’ மீது மோகம் கொண்டிருக்கும் பெண்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொண்ட பின்பே, அதனை உடலில் தீட்டிக்கொள்ளவேண்டும். டாட்டூ பதிக்கும்போது வலி ஏற்படும். சுகாதாரமற்ற முறையில் அதை மேற்கொண்டால் தொற்றுவியாதிகள் ஏற்படக்கூடும்.

    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரா?

    இன்றைய டீன்ஏஜ் பெண்களுக்கு டாட்டூஸ் ரொம்ப பிடித்தமானதாக இருக்கிறது. ஆனால் அதை பிடிக்காதவர்களும் நிறைய இருக்கிறார்கள். இளம் வயதினர் டாட்டூஸ் பதித்துக்கொள்வதை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ‘பணம் செலவு செய்து இப்படி எல்லாம் படம் வரைந்து உன் உடலை கெடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று சிலர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பலாம். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ‘எனக்கு பிடித்ததால் இதை செய்திருக்கிறேன். நீங்கள் இதை பற்றி கவலைப்படவேண்டாம்’ என்றோ, ‘என் உடலை பற்றிய விஷயத்தில் நான் முடிவெடுக்க அனுமதியுங்கள்’ என்றோ, பதில் சொல்ல நீங்கள் தயாராக இருக்கவேண்டும் அல்லது இப்படிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாதது போல் நடிக்கவாவது தெரிந்திருக்கவேண்டும்.

    டாட்டூ உங்களுக்கு மிக அவசியமா?

    இந்த கேள்வியை உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குக்காக அதை நீங்கள் பதித்துக்கொள்ளப்போகிறீர்களா? அல்லது அதற்கு வேறு விசேஷ காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் டாட்டூ பதித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் பிரியமானவரின் பெயர், பிடித்தமான வாழ்வியல் தத்துவம், நம்பிக்கைக்குரிய சின்னங்கள்.. போன்ற பலவற்றை பெண்கள் விரும்பி பொறிக்கிறார்கள். அதை பொறிப்பதற்கு முன்னால், ‘காலங்கடந்தும் அது நமக்கு தேவையா?’ என்பதை கவனத்தில் கொண்டு, ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள்.

    தற்காலிக டாட்டூ போதுமானதா?


    சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒன்றை டாட்டூவாக பதிக்க விரும்புவார்கள். ஆனால் ஆழ்ந்து யோசித்து அது தமக்கு தேவையில்லை என்ற முடிவை அவர்கள் எடுக்கலாம். அல்லது அதை பதித்து, டாட்டூ தரும் சுகத்தை அனுபவிக்கவும் அவர்கள் ஆசைப்படலாம். அப் படிப்பட்ட இருவேறு சிந்தனை கொண்டவர்கள் நிரந்தர டாட்டூவை உடலில் பதித்துக்கொள்ளவேண்டாம். முதலில் தற்காலிக முறையை பரீட்சித்துப்பாருங்கள். ஹென்னா டிசைனிங், டெம்பரரி டாட்டூயிங் போன்றவற்றை தேர்ந்தெடுத்து முதலில் பயன்படுத்தவேண்டும். கால இடைவெளிவிட்டு பின்பு அடுத்தகட்டமாக நிரந்தரம் பற்றி அவர்கள் சிந்திக்கவேண்டும்.

    டாட்டூ மங்கும் என்பது தெரியுமா?

    இவை பொறிக்கும்போது தோன்றுவதுபோல் எப்போதும் ஜொலிக்காது. வருடங்கள் கடக்கும்போது நிறம் மங்கலாம், அதன் ஒரு பகுதி சிதைந்து போகலாம். மிக நுட்பமாக பொறிக்கப்பட்டவை அழிந்தும்போகலாம். அப்படிப்பட்ட தருணங்களில் டாட்டூ கலைஞர் மூலம் ‘ரீடச்’ செய்துகொள்ள வேண்டியதிருக்கும். கறுப்பு நிறம்தான் அதிக காலம் அழியாமல் இருக்கும்.

    அவசர முடிவெடுப்பது சரியா?


    இல்லை. இது பற்றி நிதானமாக முடிவெடுக்கவேண்டும். தோழிகளுக்காக அல்லது இன்னொருவருக்காக அவசரமாக டாட்டூ பதித்துக்கொண்டேன் என்பது சரியல்ல. எதற்காக டாட்டூ பொறிக்கப் போகிறீர்கள்? எந்த கலைஞர் மூலம் அதை பொறிக்கப்போகிறீர்கள்? அதற்காக எடுக்கப்பட்ட முன்னேற் பாடுகள் என்ன? உடலில் எந்த இடத்தில் பொறிக்கப்போகிறீர்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடிவிட்டு, முடிவெடுங்கள்.



    எந்த ‘டிசைன்’ தேவை?

    பெண்கள் பொதுவாக ஒரு உடை தேர்ந்தெடுக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் தங்கள் உடலில் டாட்டூ பதிப்பதில் அதிக கவனம் கொள்வார்கள். எந்த டிசைனை பொறிக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவான முடிவெடுங்கள். அது பற்றி உங்கள் டாட்டூ கலைஞரிடம் பேசுங்கள். அதற்கு எவ்வளவு நேரமாகும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நிரந்தர டாட்டூ பதிப்பவராக இருந்தால், காலம் முழுக்க அது உங்கள் உடலோடு ஒட்டியிருக்கும். அதனால் கவனமாக டிசைனை தேர்ந்தெடுங்கள்.

    சில பெண்கள் தங்கள் தோழிகள் டாட்டூ பொறிப்பதற்கு செல்லும்போது உடன் செல்வார்கள். அங்கு சென்றதும் தங்களுக்கும் டாட்டூ பொறிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். சிலர், தானும் இந்த காலத்து பெண்தான் என்பதை காட்டிக்கொள்ள டாட்டூ பொறிப்பார்கள். அப்படி அவசரப்பட்டு செய்துகொண்டால், அடுத்த சில மாதங் களிலே ‘ஏன் இதை பதித்துக்கொண்டோம்’ என்று நினைத்து, அதை எப்படி அழிப்பது என்று ஆலோசனை கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அந்த நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    சரி.. இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் தீர ஆராய்ந்து, டாட்டூ பொறித்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அடுத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகளை தொடர்ந்து படியுங்கள்:

    உங்களுக்குத் தெரிந்த, ஏற்கனவே அதில் அனுபவமுள்ள டாட்டூ மையத்தை தேர்ந்தெடுங்கள். தோழிகள் யாருக்காவது அறிமுகமுள்ள டாட்டூ ஸ்டூடியோவாக இருந்தால் நல்லது.

    அந்த டாட்டூ கலைஞர் எங்கே படித்தார், எத்தனை வருடங்களாக இந்த துறையில் இருக்கிறார் என்பதையும் கண்டறியுங்கள். முறையான பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர் ஆழமாக ஊசியை பயன்படுத்தி குத்தும்போது தடுமாறிவிடுவார். அது சருமத்தை கடுமையாக பாதிக்கும்.

    அந்த ஸ்டூடியோவில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் எல்லாம் சுகாதாரமாக இருப்பதையும், அங்கே சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உறுதிசெய்யுங்கள். ஊசி, இங்க், இங்க் கேப், கிளவுஸ், கன் போன்றவை அதில் பயன்படுத்தப்படுகின்றன.

    டாட்டூ செய்வதற்கு முன்னால் சருமமும், உபகரணங்களும் அணுத்தொற்று எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும்.
    ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.
    பெரும்பாலான ‘டாட்டூ’ ஸ்டூடியோக்களில், டாட்டூ பொறித்ததும் ‘டெர்மலைசர்’ மூலம் அதை பொதிந்துவிடுவார்கள். 24 முதல் 48 மணி நேரம் வரை அதை அசைக்காமல் இருக்கவேண்டும். பின்பு இதமான சுடுநீரில் கழுவி அதை உரித்தெடுக்க வேண்டும். சாதாரண ‘கிளியர் பிலிம்’ ஒட்டியிருந்தால், இரண்டுமணி நேரம் கழித்ததும் அதை உரித்து எடுத்துவிட்டு சுத்தமான நீரால் கழுவிவிடலாம். லேசான ரத்த கறையும் ‘இங்க்’ பிசிறும் இருக்கும். அதை எல்லாம் கழுவி விட்டு, ‘டவல்’ கொண்டு துடைக்க வேண்டும். பொறித்த இடத்திற்கு மேல் பூசுவதற்கு ‘டாட்டூ வேக்ஸ்’ தருவார்கள். அதை பூசிக்கொள்ள வேண்டும். அவர்கள் தராவிட்டால், ‘பேபி ஆயில்’ அல்லது மோய்ஸ்சரசரை 7 நாட்கள் வரை அந்த இடத்தில் பூசிக்கொள்ளலாம். பத்து நாட்களுக்குள் காயங்கள் ஆறி, சருமம் இறுகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

    டாட்டூ பதித்த பத்து நாட்கள் வரை அந்த இடத்தில் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. அதுபோல் அந்த பகுதியில் தூசு படியாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சி, எடைதூக்கும் ஜிம் பயிற்சி, வியர்க்கும் அளவுக்கு வேலை செய்தல் போன்றவைகளையும் தவிர்க்கவேண்டும். ஒருமாதம் கடந்த பின்பும் டாட்டூ பதித்த இடத்தில் வலி, வீக்கம், சொறி, ரத்த ஒழுக்கு போன்றவை ஏற்பட்டால் சரும டாக்டரிடம் ஆலோசனை பெற்று தீர்வு காணவேண்டும்.

    தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சிலர், ஏற்கனவே பதித்த டாட்டூவை அழிக்க முன்வருவார்கள். அதை எப்படி அழிக்கலாம் என்று அனுபவமற்றவர்களிடம் ஆலோசனை கேட்டால், ‘அதன் மீது உப்புத் தண்ணீரை ஊற்றி தேய்த்துக்கொண்டே இருந்தால், அழிந்துபோய்விடும்’ என்று சிலர் சொல்வார்கள். அந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுவது தவறு. அது சருமத்திற்கு பாதிப்பை உருவாக்கும்.



    பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை நீக்கும் முறையும் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. லேசரை பயன்படுத்தி அழிக்கும் முறையே பெரும் பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் லேசர் மூலம் உடனடியாக முழுமையாக அழித்துவிட முடியாது. பதிக்கப்பட்டிருக்கும் டாட்டூவின் அளவு, சருமத்தின் தன்மை, பதிக்கப்பட்ட டாட்டூவின் ஆழம் போன்றவைகளை பொறுத்ததுதான் அதை அழிப்பது பற்றி தீர்மானிக்க முடியும். சிலருக்கு இரண்டு, மூன்று முறை கூட லேசரை பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

    டாட்டூ கலைஞர்கள் சிலர் கொள்கைரீதியாக சில முடிவுகளை எடுத்து பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான பெண்கள் காதல் தரும் வேகத்தில் தங்கள் காதலன் பெயரை டாட்டூவாக பதித்துக்கொள்கிறார்கள். ‘நீ என் உயிரைப் போன்றவன்’ என்று கூறி தனது காதலனிடம் அதை காட்டி பெருமைப்படவும் விரும்புகிறார்கள். ஆனால் டாட்டூ பதித்த அடுத்த மாதத்திலோ அல்லது ஆறு மாதங்களிலோ காதல் முறிந்துபோய்விட, அந்த பெயர் அவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்துகிறது.

    அதனால் ‘டாட்டூ’ பதித்த கலைஞரையே தேடிவந்து, அந்த டாட்டூவை எப்படியாவது உடனே அழித்துவிட வேண்டும் என்று மன்றாடுகிறார்கள். இந்த நெருக்கடிக்கு இடம் கொடுக்காத கலைஞர்கள் சிலர் முதலிலே ‘தாங்கள் காதலர்கள் பெயர்களை பெண்களின் உடலில் பதிப்பதில்லை’ என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதுபோல் டாட்டூ பதிக்க வருபவர்களிடம் அவர்களுக்கு எந்த அளவுக்கு தைரியம் இருக்கிறது என்பதையும் பரீட்சித்து பார்க்கிறார்கள். ஏன்என்றால் சிலர், மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்வதற்கே அலறும் ரகமாக இருப்பார்கள்.

    அவரைப் போன்றவர்கள் முதலில் பச்சைக்கிளி ஒன்றை தங்கள் தோளில் டாட்டூ செய்யும்படி கூறுவார்கள். டாட்டூ பதிக்கத் தொடங்கியதும் முதலில் சிறிது நேரம் வலியை பொறுத்துக்கொள்வார்கள். பின்பு அழுதுவிடுவார்கள். கிளியின் ஒரு சிறகை பதித்ததும் ‘அதற்கு மேல் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. விட்டுவிடுங்கள்’ என்று கூறி விட்டு கிளம்பிவிடுவார்கள். இப்படி சிலர் அரை குறை ‘டாட்டூ’ வுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். கேட்டால், அதுதான் இப்போதைய பேஷன் என்பார்கள்.

    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும்.
    உடலில் நிரந்தரமாக பதித்துக்கொள்ளும் டாட்டூஸ் சின்னங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற சின்னங்களை பதிவு செய்யவேண்டும். ‘டாட்டூஸ்’ சின்னங்கள் உணர்த்தும் அர்த்தங்கள்!

    செமிகோலன்: ‘என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி எதுவும் கிடையாது. எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் கடந்து நான் வாழ்வேன்’ என்பதை ‘செமிகோலன்' சின்னம் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய கஷ்டங்களில் இருந்து விடுபட்டவர்களும், தற்கொலை முயற்சிகளில் இருந்து மீண்டவர்களும் இந்த டாட்டூ சின்னத்தை பொறித்துக்கொள்கிறார்கள்.

    தாமரை: இந்த மலரை பொறித்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தாமரை தண்ணீருக்கு மேல் பூத்திருக்கும். அடி ஆழம் வரை தண்டினை வளர்த்து நிலைத்து நிற்கும். சேற்றில் கூட செந்தாமரை மலர்ந்து நிற்கும். அதனால் பல விஷயங்களில் தான் தன்னிகரற்றவர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறவர்கள், இதனை பொறித்துக்கொள்கிறார்கள்.

    ஆங்கர்: ‘எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் நான் அசையமாட்டேன். மற்றவர்களைகூட பிடித்து இழுத்து வசீகரித்து என்னோடு தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இருக்கிறது’ என்பதை காட்டுவது இந்த ‘நங்கூரம்’ சின்னம். இது பலத்தின் அடையாளம்.



    யிங்-யாங்: இது சீனத் தத்துவத்தை பிரதி பலிக்கும் சின்னம். வாழ்க்கையை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த சின்னத்தை வரைந்து கொள்கிறார்கள். ‘உலக வாழ்க்கை நன்மையும், தீமையும் கலந்தது. எல்லா நன்மையிலும் தீமை கலந்திருக்கும். அதுபோல் எல்லா தீமையிலும் நன்மையும் கலந்திருக்கும்’ என்ற தத்துவத்தை இந்த சின்னம் உணர்த்துகிறது.

    டிராகன்: இது இரண்டுவிதமான அர்த்தங்களை கொண்டிருக்கிறது. வேகம், எதிர்பார்ப்பு, ஆற்றல் போன்ற நேர்மறை சக்தியின் வெளிப்பாடாகவும், மற்றவர்களை மிரள வைத்து பயம் கொள்ளச் செய்தல், பொறாமை போன்ற எதிர்மறை சக்திகளின் வெளிப்பாடாகவும் இதில் உள்ளது.

    சிறகு: சுதந்திரத்தை உணர்த்துகிறது. இவர்கள் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனந்தமாக வாழ விரும்புவார்கள்.

    சூரியன்: பரந்த ஆற்றல், புதுமையான செயல்பாடு, தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

    இவைகளைத் தவிர வேறு பலவிதமான சின்னங்களையும் பொறித்துக்கொள்கிறார்கள். டாட்டூவில் ஒருவர் பொறித்திருக்கும் சின்னத்தை வைத்து அவரது குணாதிசயத்தையும் ஓரளவு கணித்துவிட முடியும்.
    ×