search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu red alert"

    தமிழகத்துக்கு 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #TNRain #RedAlert #NDRF

    சென்னை:

    தமிழ்நாட்டின் தென் பகுதி வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழ் நாட்டில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 9-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது இன்று புயல் சின்னமாக மாற உள்ளது. அந்த புயல் சின்னம் ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் அந்த புயல் தாக்கம் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு 3 மாநிலங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மிக மிக பலத்த மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    நாளை தமிழ்நாட்டின் தென் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டுக்குள் ஈரப்பதம் மிக்க காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த 6 மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் எந்த சவாலையும் சமாளிக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வங்கக் கடல் பகுதியில் தமிழகம் அருகே குறைந்த காற்றழுத்தம் உருவாக உள்ளது. அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் பரலாக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

    அந்த புயல் சின்னம் நகர் வதை பொறுத்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2 புயல் சின்னங்கள் அடுத்தடுத்து தமிழ் நாட்டுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துவதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     


    இதற்கிடையே நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை இரவிலும் நீடித்தது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கின.

    ஆனால் பலத்த மழை விடிய விடிய நீடித்த காரணத்தால் தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று நான்காவது நாளாக பரவலாக மழை நீடித்தது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாளையும், நாளை மறு நாளும் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர். கடல் மிகவும் சீற்றத்துடன் இருப்பதால் கடலுக்குள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மழை பாதிப்பு சேதங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுலா பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக மூணாறு, பாலக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் கவனமாக இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீர்நிலை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் வெள்ள பகுதிகளில் நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களில் இன்றே நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த முகாம்களில் வந்து தங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை நீரை அகற்றவும், கீழே விழும் மரங்களை அகற்றவும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    முக்கிய மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்வதை 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது போல மழை அதிகரிக்கும்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கேரள அரசு திருச்சூர், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் இருந்து அணைகளில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. எனவே அந்த தண்ணீர் வரும் பகுதிகளில் உள்ள தமிழக மக்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    நாளை (7-ந்தேதி) ரெட் அலர்ட்டை முதலில் கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களுக்கு மட்டுமே அகில இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. ஆனால் நேற்று இரவு கர்நாடகாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. காவிரி நதிநீர் பிடிப்பு பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே அரபிக் கடல், வங்க கடல் இரண்டு இடங்களிலும் புயல் சின்னம் உருவாக இருப்பதால் கொச்சி மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்படை வீரர்கள் மீட்பு பணி செய்வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்களுக்கு உதவுவதற்காக கொச்சி கடற்படை தலைமையகத்தில் இருந்து ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு, கர்நாடகாவை விட கேரளாவுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் கேரளாவுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அதிகளவில் அனுப்பப்பட்டுள்ளன. #TNRain #RedAlert #NDRF

    ×