search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surplus"

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி தண்ணீர் தற்போது சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்லாவரம், நாகல்கேனி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

    தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனகழிவு நீரும், சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் இந்த பிரச்சினை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே தாம்பரம் மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புத்தேரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொது மக்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள் ஏரி கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல சுகாதார பிரச்சினைகள் உள்ளது.

    புத்தேரி ஏரியில் இருந்த வெளியேறும் உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கும் செல்கிறது. எனவே புத்தேரி ஏரி தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். தற்போது ஏரியில் கலந்து வரும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    திருவள்ளூர்:

    சென்னை நகரப் பகுதியில் 2035-ம் ஆண்டுக்குள் தினசரி குடிநீர் தேவை 2,522 மில்லியன் லிட்டராக உயரும் என்று அதிகாரிகள் கணக்கிட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் ஆதாரங்களை அதிகரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.

    பருவ மழையில் பூண்டி ஏரி நிரம்பும் போது கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். இதனால் பல லட்சம் கனஅடி உபரி நீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. மேலும் அதிக அளவு உபரி நீர் திறக்கப்படும்போது கரையோர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பலத்த வெள்ள சேதமும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையிலும் குடிநீருக்கு பயன்படுத்தும் வகையிலும் உபரிநீரை தேக்கி வைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆய்வுகள் நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீரை சேமித்து வைக்க பூண்டி ஏரியில் இருந்து மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் மொத்தம் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள மானாவூர் ரெயில் பாதை மற்றும் காவேரிப்பாக்கம் குளம், பட்டரை பெருமந்தூர் இடையே 2 இடங்களில் தடுப்பு அணை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தின் கீழ்நிலையில் இருளிப்பட்டு தடுப்பணைக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையிலும், பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக் கட்டுக்கு இடையே 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிக்காக ரூ.5.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    உபரி நீரை தேக்குவதன் மூலம் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், வட சென்னையில் சடையங் குப்பம்-எடையஞ்சாவடியில் கொசஸ்தலையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 600 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்படும் இந்த ஆய்வு இன்னும் 6 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×