search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strong police protection"

    சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கோவை:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தீவிரவாதிகள் ஊடுருவி சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர் குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனையடுத்து தமிழகத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் இடம், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    கோவையில் சுதந்திர தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை சோதனை செய்து வருகின்றனர்.மேலும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களை மாவட்டத் தில் உள்ள 11 சோதனை சாவடிகளில் நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    ரெயில் நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை தீவிர சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக் கின்றனர்.மேலும் பிளாட் பாரங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    சிதம்பரத்தில் 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதபடி அந்த தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் தில்லை காளியம்மன் ஓடை அமைக்கப்பட்டது. காலங்கள் செல்ல , செல்ல ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து தில்லை காளியம்மன் ஓடையின் இருபுறமும் உள்ள கரையை ஆக்கிரமித்து குடிசைகள் , அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

    இதனால் தில்லை காளியம்மன் ஓடை சுருங்கி மழை நீர் வடிந்து செல்வதில்லை. இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றன. எனவே தில்லை காளியம்மன் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 கட்டிடங்களை கணக்கெடுத்து இடிக்க பொதுப்பணி துறையினர் மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவின் பேரில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இது வரை 3 கோவில்கள் உள்பட 177 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    சிதம்பரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் சிதம்பரம் நகரத்தையே புரட்டிப்போட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் உள்பட எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தில்லை காளியம்மன் ஓடையின் கரையில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், கூறியதாவது:-

    தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குறைந்த அளவே ஆழப்படுத்தப்படும். இந்த நிலையில் தில்லை காளிம்மன் ஓடை அருகே உள்ள வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

    எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் இடித்து அகற்றப்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும், மாற்று இடமும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன் கூறியதாவது:-

    தில்லைக்காளியம்மன் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லை. அதே ஐகோர்ட்டு உத்தரவில்தான், ஆக்கிரமிப் பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் வீடுகளை இடித்து அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் உடமைகள் அனைத்தும் ரோட்டில் வீசி எறியப்படுகின்றன.

    இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து நடுரோட்டில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×