search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRH v CSK"

    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாக சென்னை அணியின் பொறுப்பு கேப்டன் ரெய்னா கூறினார். #IPL2019 #SRHvCSK
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சாய்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த எளிய இலக்கை டேவிட் வார்னர் (50 ரன்), ஜானி பேர்ஸ்டோ (61 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பிய ஐதராபாத் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.

    தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘இந்த தோல்வி, எங்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாகும். நாங்கள் போதுமான அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. பிளிஸ்சிஸ்- ஷேன் வாட்சன் ஜோடி (முதல் விக்கெட்டுக்கு 79 ரன்) அருமையான தொடக்கம் அமைத்து தந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். தொடக்க ஜோடி பிரிந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னடைவாகி விட்டது. பந்துகளை வீணாக்காமல் ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தொடர்ச்சியாக எடுத்திருக்க வேண்டும். எது எப்படியோ 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக டோனிக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அனேகமாக அடுத்த ஆட்டத்தில் (21-ந்தேதி பெங்களூருவுக்கு எதிராக) அவர் விளையாடுவார்.’ என்றார்.

    சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘இந்த தொடரில் முதல்முறையாக இது போன்ற ஒரு (மோசமான) ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த குறைபாட்டை வீரர்கள் எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

    தோல்வி குறித்து அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. பலவீனமான பகுதியை கண்டறிந்து அதை திருத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பேட் செய்தோம். அதன் பிறகு நெருக்குதலுக்கு உள்ளாகி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தோம். அதாவது ஐதராபாத் பவுலர்கள் அபாரமாக பந்து வீசினர். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார். #IPL2019 #SRHvCSK
    ×