search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SorimuthuAyyanar Temple"

    • திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.
    • பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.

    நெல்லை:

    பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 16-ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நாளை(திங்கட்கிழமை) முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அன்றைய தினங்களில் அரசு பஸ்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது. அதேநேரத்தில் நேற்று முதல் கோவிலில் குடில் அமைத்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம், போராட்டங்கள் என பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், வனத்துறை தலையீடு இல்லாமல் இருப்பதற்காக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி திருவிழா முடியும் வரை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூடுதல் பொறுப்பாக காரையாறு பகுதியை கவனித்துக்கொள்ள உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில், இன்று அதிகாலையிலேயே கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாபநாசம் சோதனை சாவடிக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பக்தர்கள் எவ்வித இடைஞ்சலும் இன்றி கோவிலுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். அப்போது சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்க ப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை தனியார் வாகனங்களில் பொதுமக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு அங்கு தங்கு வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் முழுமையாக மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை பக்தர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தாமலும், ஆழமான பாறைகள் நிறைந்த பகுதிகளுக்கு போகாமல் எப்போதும் போல குளிக்கலாம். அதில் எந்த தடையும் இல்லை. அதுகுறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×